Subscribe

BREAKING NEWS

24 May 2017

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு

சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும்,முருகனின் பரிபூரண அருளாசி பெற்று,தமிழுலகில் நன்கு அறிமுகமானவரும்,தமிழ்  தந்த அகத்திய மகரிஷி பற்றி இந்த பதிவில் காண இருக்கின்றோம். அகத்தியர் கூறும் அறிவுரை மூலம் தொடர்வோம்.


அகத்தியர்அறிவுரை! 

"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." 



மேற்சொன்ன அகத்தியரின் அறிவுரை மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள். வாழ்வின் உன்னதம் புரியும். நமக்கேன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்து,யோசித்து மேலும் மேலும் துன்பப்படாமல் வாழ அகத்தியரின் அருளாசி கிட்டும்.அகத்தியரின் வரலாறை கொஞ்சம் பார்க்கலாமா?


 அகத்தியர் வரலாறு


பெயர் : அகத்தியர் (அ) அகஸ்தியர் (அ) குடமுனி (அ) கும்பயோகி (அ) கும்பமுனி (அ) பொதிகைமுனி

பிறந்த மாதம் : மார்கழி

பிறந்த நட்சத்திரம் : ஆயில்யம்

குரு : சிவன்

சீடர்கள் : போகர், மச்சமுனி

மனைவி : லோப முத்திரை (விதர்ப நாட்டு மன்னனின் மகள்)

மகன் : இத்மலாகன் (அ) சங்கரன்

சமாதி : அனந்தசயனம் (திருவனந்தபுரம்), கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவில் என்றும் கூறுவார்.

வாழ்நாள் : 4 யுகம் 48 நாட்கள்


இவர் பொதிகையில் தவம் செய்ததால் “பொதிகைமுனி” என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் “கும்பமுனி” என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் ‘அகத்தியர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்




              வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

               அகத்தியரின் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. கீழ்காணும் அகத்தியர் திரைப்படம் மூலம் அவரைப் பற்றி தொட்டு காட்டி உள்ளார்கள். இப்பதிவை வாசிக்கும் அனைத்து நல் உள்ளங்களும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்.




அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியம் :

அகத்தியம் என்று இங்கு சொல்ல வருவது அகத்தியரை பூஜித்தல். அகத்தியரை வணங்க நம்முள் அன்பு பெருகும். அன்பு  பெருக கருணை மிகும்.இந்த அன்பும்,கருணையும் கொண்ட நிலையே அகத்தியம். அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் அன்பும்,கருணை மிக்கோரை இருப்பார்கள் என்பது உறுதி. இந்த அகத்திய நிலை எய்திய பின்,ஒவ்வொருவரும் தங்களை சமூக சேவைகளில் ஈடுபட்டு, பிறவியின் பலனை அனுபவிப்பார்கள். 



"நெஞ்சார நினைப்பவர்க்கு
நிழல் ஆவானை
நீங்காதோர் குலம் தழைக்க
நிதியாவானைச்
செஞ்சொலி வயற்பொழில்சூழ்
தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற
சித்தன் தன்னை
வெஞ்சாபமுமில்லை
ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால்
வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று
யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை
அகத்துள் வைப்போம்."

அருட்குருவாம் அகத்தியரை  மனமார பூஜித்தால் நோயும், வறுமையும், பகைமையும், மன உளைச்சல் நீங்கும். மேலும் அகத்தியரை வணங்க  தனக்கும் தன் சந்ததிகளுக்கும் செல்வநிலை பெருகச் செய்வார். மேலும், அகத்தீசரின் பாடல்கள் அத்தனையும் வளப்பம் பொருந்திய தில்லைவாழ் அம்பலவாணரின் கால் சிலம்பொலிபோல் கேட்க இனிமை உடையதாக இருக்கும். காரணம் அவரின்  பாடல்கள் அத்தனையும் பிறவிப்பிணிக்கு மாமருந்தாக இருப்பதால் படிக்கவும், கேட்கவும், சிந்திக்கவும் இனிமை உடையதாக இருக்கும். அகத்தியரை  பூஜித்தால் அறியாமை காரணமாக பல ஜென்மங்களில் செய்த பாவத்தால், பிறரால் சபிக்கப்பட்ட கொடுஞ்சாபங்களும் நீங்கும், பாவங்களும் நீங்கும். அதுமட்டுமல்லாமல் "முருகா! " என்றால் ஈரேழு பதினான்கு லோகமும் கிடுகிடுவென நடுங்கும் ஆற்றல்பெற்ற ஆசான் சுப்ரமணியரின் வேல்படை நமக்கு உற்றதுணையாக இருக்கும். மேலும் வெற்றிகளும் உண்டாகும். தொடர்ந்து அகத்தியரை  மனதுள் வைத்தால்  நாம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்  குருவாக வந்து "அஞ்சேல்! " என்று ஆட்கொண்டு அருள்செய்வார். எனவே அகத்தியம் எய்த, அகத்தியரை மனம்,மொழி,மெய்களில் ஆட்கொள்ளச் செய்வோம் 


அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பிரார்த்தனையை தினசரி தவறாது மேற்கொள்ளவும்.

பிரார்த்தனை 1

அகத்திய பெருமானே ! அற வொழுக்கதொடு வாழ வேண்டும்.நான் செய்த கொலை கருமங்களிலிருந்து எம்மை காப்பாற்றுவாயாக!
நான் இனி நினைக்கும் மனம்,மெய்,மொழி இம்மூன்றில் அடங்கி உள்ள 10 தீய குணங்களில் இருந்து காப்பாயாக ! முறையே 
எதையும் விரும்புதல்,காமப் பற்று, கொலை செய்ய நினைத்தல்,பொய்யுரைத்தல்,கோள் சொல்லல்,சினந்து பேசுதல்,பயனில் கூறல்,
களவாடுதல்,வீணாக தொழில் புரிதல்,கொலை செய்தல் ஆகியவற்றை அறவே நீக்கிட வேண்டும்.தீயவருடன் சேராமல் விலகி இருத்தல் 
வேண்டும்.உத்தம குணமுடையோருடன் இணைந்து நேசித்து வாழ வேண்டும்.எனது வருவாய்க்கேற்ப வறுமைப்பிணி,மனத்துயரம் இவற்றால் 
வருந்துவோரையும்,இறப்பவரையும் ஆதரித்தும்,தீயவர்க்கும்,நல்லவர்க்கும்,பகைவர்க்கும்,நன்மையே புரிந்து குணம் அடைய வேண்டும் .

பிரார்த்தனை 2

இறைவனே.! அகத்தீசனே! என்னை பாவ மன்னிப்பு கோருபவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக.இன்னும் பரிசுத்தமுடையவர்களில் ஒருவனாக 
ஆக்குவாயாக.உன்னுடைய உத்தம அகத்திய அடியார்களில் ஒருவனாக ஆக்குவாயாக.நீ மிகத் தூய்மையானவன் அகத்தியனே! நான் உன் 
புகழைக் கூறுகின்றேன்.என்றும் எமது வேண்டுதலுக்குரிய தலைவனே! எமக்கு உம்மைத் தவிர வேறு யாருமில்லை. உன்னிடம் எம் கர்மவினை 
தீர பாவ மன்னிப்பு கோருகின்றேன்.சமாதானம் அனைவர் மீதும் உண்டாவதாகுக.எல்லாப் புகழும் சர்வேஸ்வரனான அகத்தீஸ்வரனுக்கே உரியதாகுக.

பிரார்த்தனை 3

அகத்தீசனே ! உம்மை பிரம்ம முகூர்த்தத்திலே தொழுவது தூக்கத்தை விட சிறந்ததாகும்.வெற்றி ஒருவர் பெற வேண்டுமெனில் உன் நாம 
ஜெபம் ஒன்றே தாரக மந்திரமாகும்.ஏன் எனில் நீர்! மெய்யே உரைத்தீர்.தவம் செய்தீர். சத்தியத்தை பகன்றீர்.எங்கள் புனித அழைப்பிற்கு 
நிலைப்பாடான வேண்டுதலுக்கு உடையவனே.உயர்நிலையில் எங்களை உயர்த்தி அருள்வாயாக நிச்சயமாக நீரே..எங்களை காப்பாற்றி அருள்வீராக.

 அகத்தீசனே! நாங்கள் நிச்சயமாக உன்னிடமே உதவி தேடுகின்றோம்.உன்னிடமே பாவ மன்னிப்பு கோருகின்றோம்.உன்னைக் கொண்டே 
நம்பிக்கை கொள்கின்றோம்.உன்னிடமே பொறுப்பு வைக்கின்றோம்.நன்மைக்காகவே உன்னையே தொழுகின்றோம்.உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.எனவே உமக்கு மாறுபாடு செய்ய மாட்டோம்.உமக்கு பாபம் செய்கிறவனை விட்டு ஒதுங்கிக் கொண்டு விடுகிறோம். என்றும் 
அகத்தீசனே நாங்கள் உன்னையே வணங்குகிறோம்.தலை தாழ்ந்து பணிதல் செய்கின்றோம். உம்மிடமே நாங்கள் அன்பு செலுத்த விழைகிறோம்.வழிபட்டு நடக்கின்றோம்.அனைத்து துன்பத்திலிருந்து இந்த அகிலத்தை காத்திட வேண்டும்.


அடுத்து இங்கே நாம் அகத்திய அடியார் ஒருவரின் அனுபவ நிலையை அவரின் வரிகள் மூலம் காண்போம்










நன்றி : திருமதி.நளினி 

மேற்கண்ட அகத்திய அனுபவ நிலையை வைர வரிகளில் பதிப்பித்த திருமதி நளினி அவர்களுக்கு TUT குழுமம் வாயிலாக நன்றியை 
தெரிவித்து கொள்கின்றோம்.

- அகத்தியம் மேலும் தொடரும் ...


No comments:

Post a Comment