Subscribe

BREAKING NEWS

13 June 2017

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி


அந்த காலத்துல கதை சொல்லும் போது ஆரம்பிப்பாங்க. ஏழு கடல் தாண்டி,ஏழு மலை  தாண்டிபோனா  அங்க ஒரு கூண்டு இருக்கும்.அதுக்குள்ள ஒரு கிளி இருக்கும் அப்படினு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கும். அது போல் தான் இன்று நாம் பயணிக்க இருப்பது வெள்ளியங்கிரி நோக்கி.வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க கண்டிப்பாக ஏழு மலை பயணம் செய்ய வேண்டும். ஏழு மலை ஒவ்வொன்றும் அற்புதம்.சூட்சும ரகசியம்,சித்தர்களின் ராஜாங்கம் என சொல்லிக்கொண்டே போகலாம்.முதலில் நாம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பற்றி பார்ப்போம்


பூண்டி

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் – உடனுறை மனோன்மணி அம்மன் திருக்கோவில், சித்தர்கள் வாழும் பூமி, சிவரூபம், தபரூபம் தழைக்கும் ஆன்மீக மலையடிவாரம்.பூண்டி சிற்றூர் –நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் ஆகிய உலகைக் காக்கும் பஞ்ச பூதங்களின் அதிர்வுகள் ததும்பும் அருள்மிகு பஞ்சலிங்கேசன் திருக்கோவில் அமைவிடம். இயற்கையெழில் மிக்க பூண்டி மலைச்சாரல். வெள்ளியங்கிரி ஈசனின் உறைவிடம்.இத்திருக்கோவில் தொன்மைச் சிறப்பு கொண்ட இடமாகும். சித்தர்கள் வாழ்ந்த வெள்ளியங்கிரி மலையின் வாசற்படியாக பூண்டி
திகழ்கிறது. ஆன்மீகச் சிறப்பு கொண்ட மலையடிவாரமாகவும் பூண்டி விளங்குகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேற்கு மலைத் தொடரில், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்பூண்டி அமைந்துள்ளது. கோவையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் சிற்றூரான பூண்டி அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறிச் செல்ல வேண்டும். ஏழு மலைகள் சென்று,வெள்ளியங்கிரி ஈசனை, சுயம்புலிங்கத்தைத் தரிசிக்கலாம். இதற்கு முறையான பயணத்திட்டம் அவசியமாகிறது. வெள்ளியங்கிரி மலைப்பகுதி, பல்வேறு சித்தர்கள் உலவிய மலைப்பகுதி.மலை ஏறிச் செல்ல மூங்கில் தடியுடன் செல்வது உதவிகரமாக இருக்கும். தேவையான பொருட்கள், உணவு, குடிதண்ணீர் எடுத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது. பெண்கள் இங்கு மலைப்பயணம் செல்ல அனுமதி இல்லை. தை முதல் தேதியிலிருந்து வைகாசி விசாகம் வரை மலைபயணம் செய்யலாம். மலைப் பயணம் அதிகாலை வேளையில் தொடங்குவது வழக்கமாக உள்ளது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கி.மீ மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது.

சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நிலையில்  அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள்,சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார்,சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.



அடிவாரக் கோயில்:

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டைசெய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில்
ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.


பொது தகவல்:

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கைலாயம் மூன்று. வடகயிலை என்பது வட துருவத்தில் கடலில் அமைந்துள்ளது. மத்திய கயிலை என்பது  இமயமலையில் உளளது. தென் கயிலை  என்பது தமிழகத்தில் கோவை நகரிலிருந்து சுமார் 30 கி. மீ. தொலைவிலுள்ள வெள்ளிங்கிரி, வெள்ளிமலை, தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரியில் அமைந்துள்ளது. இதில் வடகயிலைக்கு  செல்லவே முடியாது என்பர். மத்திய கயிலை அனைத்து மக்களும் சென்று தரிசனம் செய்வது என்பது சிரமமானது. இந்த குறையை போக்கும் வகையில்தான் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று ஈசனை தரிசித்தால் இமயமலையில் உள்ள கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கிறது. ஒரு முறை வெள்ளியங்கிரி மலை ஏறிவந்தால் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது. மலை முழுவதும் மூலிகைகள் இருப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை கிடைக்கிறது. தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை ஆகிய நாட்களில் மலைமீது உள்ள சுவாமிகிரியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். ஆனால் மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை ஆண்டு முழுவதும், அனைவரும் சென்று தரிசிக்கலாம்.



பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி:

இது சிவன் அமர்ந்த மலை – பக்தர்கள் பெருமிதத்தோடு கொண்டாடும் தென்கைலாயம்! ஆம் தென்கைலாயம். சிவனவன் அமர்ந்த மலையனைத்தும் கைலாயம் என அழைக்கப்பட, கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையும் தென்கைலாயம் என தென்நாட்டாரால் வழிப்படப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.



 தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்திருக்கிறது.இந்த வெள்ளியங்கிரி மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையின் மேல் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.கயிலாய மலையை போன்றே இந்த வெள்ளியங்கிரி மலையிலும் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையில் ஒரு குகையினுள் சுவயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.
இந்த வெள்ளியங்கிரி மலையில் மொத்தம் ஏழு குன்றுகள் இருக்கின்றன. இவற்றை கடந்தே நம்மால் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும். இந்த மலைப்பாதை சவால் நிறைந்த ஒன்று என்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தாக்கும் விலங்குகள் வாழும் பகுதியாகவும் இருக்கிறது.இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் தென் கயிலாயம் எனப்படும் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது.இந்த வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை வர பிப்ரவரி முதல் ஜூன் மே மாதம் வரையிலான காலகட்ட்டம் உகந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சித்திரா பௌர்ணமி பண்டிகையின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்றனர்.12 - 45 வயதுடைய பெண்கள் இந்த மலையின் மீது ஏற அனுமதியில்லை. மலையேற ஏற ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால் சுவாச கோளாறு இருப்பவர்கள் இந்த மலையேற்றத்தை தவிர்ப்பது நல்லது. இங்கே அவசர உதவி கிடைக்க தாமதமாகும் என்பதால் மலையேறுபவர்கள் சில அவசர கால மருந்துகளையும் தங்களுடன் எடுத்து செல்வது சிறந்தது. 

கோயம்பத்தூர் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு காந்திபுரத்தில் இருந்து தினசரி நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மஹாசிவராத்தி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இங்கே மலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.சுற்றுவட்டாரப்பகுதியில் தங்கும் விடுதிகள் எங்கும் இல்லை என்பதால் இந்த அடிவார கோயிலிலேயே பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.வெள்ளியங்கிரி மலையில் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக்கூடாத விஷயங்களில் ஒன்றாகும். படந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் தன் கரம் பரப்புவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.ஏறுவதை விடவும் இறங்குவது இந்த வெள்ளியங்கிரி மலையில் மிகவும் கடினமான காரியமாகும். இறங்கும் போது நிலைதவறி கீழே விழுந்துவிடாமல் இருக்கும் மலையேறும் பக்தர்கள் அனைவரும் மூங்கில் கம்பு ஒன்றை உடன் கொண்டு செல்கின்றனர்.


குறிப்பிட்ட சில மாதங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் தோன்றும் காட்டாறுகள், வேட்டையாடும் விலங்குகள் போன்றவற்றினால் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவது உயிருக்கே ஆபத்தான விஷயமாக முடியும்.இந்த மலையில் இன்றும் ஏராளமான சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் அரூபமாக தியானத்தில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதனால் மலையேறும் போது கூடுமானவரை சத்தம் போடுவதை தவிர்க்கப்பாருங்கள்.இயற்கையும் ஆன்மீகமும் உங்களுக்கு மிகவும் விருப்பமானவை என்றால் நிச்சயம் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தாருங்கள். வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக அது நிச்சயம் அமையும்.

முதலில் நாம் கோவை காந்திபுரத்தில் இருந்து பேருந்தில் ஏறி பூண்டி செல்லும் பிரிவில் இறங்கினோம்.அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் பூண்டியை அடையலாம்.பாதை செல்லும் அழகே தனி தான்.




பூண்டி அடிவாரக்கோவிலை அடைந்தோம்.கோவிலின் காட்சிகள் தங்களுக்காக 



கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம். அதுவும் எம் பெருமான் வெள்ளிங்கிரி ஆண்டவரின் கோபுர தரிசனம் சொல்லவா வேண்டும்? கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து நாம் உள்ளே சென்றால் மூன்று சந்நிதி இருந்தது.அத்தனையும் கண்டு சொக்கிப் போனோம்.




விநாயகர் கோவிலின் இடப் புறமாக நால்வரை தரிசித்தோம்.





நால்வர் பெருமக்கள் மற்றும் அடியார் பெருமக்கள் தரிசனம் முடித்து, முதல்வனாம் விநாயகரை வேண்டினோம்.பின்பு தலைவரை(சிவ பெருமானை) தரிசித்து, இறுதியாக தாயாரை வணங்கினோம்.இந்த யாத்திரை முழுதும் உடன் இருந்து அருள் தர வேண்டிவிட்டு கோவில் முழுதும் சுற்றினோம். முழுதும் மண்டபம் மற்றும் அருமையான தெய்வீக மணம் கமழும் அமைதியான இடம். கண்டிப்பாக அனைவரும் ஒருமுறையேனும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் அருள் பெற இங்கே வரவும். சொல்லில் அடங்காது அந்த இறை அனுபவம். எப்போதும் மெய் சிலிர்க்கும் சுகானுபவம்.

அப்படியே கோவில் வலப்புறமாக மேலே சென்றால் வெள்ளியங்கிரி மலை ஏற்றம் தான்.

அமைவிடம் : கோவையில் இருந்து 40 கீ.மி தூரத்தில் உள்ளது


- வெள்ளியங்கிரி மலை ஏற்றம் இனிவரும் பதிவுகளில் தொடரும்.

No comments:

Post a Comment