Subscribe

BREAKING NEWS

17 July 2017

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி..


ஆடி மாதம் பொறந்தாச்சு..

சிவனும்,சக்தியும் நம் உடலில் இருப்பதாய் சரிபாதியாய் அர்த்த நாரீஸ்வரர் உருவில் நாம் காண்கின்றோம்.சிவம் பெரிதா? சக்தி பெரிதா? என்று கேள்விகள் தொடுப்பதைவிட்டுவிட்டு,சிவம் இல்லையேல் சக்தி இல்லை.சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே அர்த்த நாரீஸ்வரர் உருவின் தாத்பரியம்.மேலும் இந்த உடலில் வலதுபக்கம் சிவன் என்றும், இடப்பக்கம் சக்தி என்றும் எண்ணலாகா.

நம் உடலின் இயக்கத்தில் ஒரு சக்தி பெறுகின்றோம்.அந்த ஆற்றல் திணிவு தான் சக்தி. நாம் தியான யோகத்தில் அல்லது ஒரு அமைதி நிலையில் ஒரு உணர்வு பெறுகின்றோம் அல்லவா? அந்த உணர்வே சிவம். இத்தகு சிறப்பு பெற்ற நம் உடலின் இயக்கமே சிவசக்தி தரிசனம்.

இந்த சக்தி தரிசனத்தை பெற இன்ற பிறந்துள்ள ஆடி மாதம் சிறந்து.ஏனெனில் நம் பண்பாடு,கலாச்சாரம் மற்றும் வானியல் இணைந்த இயற்கை மாறுபாடுகள் வைத்து,ஆண்ட்ரே நம் முன்னோர்கள் ஆடி மாதத்தை  "சக்தி மாதம்" என்றே வரையறை செய்தனர்.




ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.


மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.

தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.




ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி 18, ஆடி விரதம், ஆடித் தள்ளுபடி என ஆடி மாதம் என்பது மக்களுக்கு கொண்டாட்டங்கள் நிறைந்தது.

 பயிர்கள் விதைத்தல், கூழ் ஊற்றுதல், எல்லை தெய்வங்களுக்குத் திருவிழா நடத்துதல் என ஆடி மாதம் முழுவதும் தமிழகமே விழாக் கோலம் பூண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் சிறப்பு மாதமாக ஆடி ஆக்கப்பட்டு அது சார்ந்த உற்சவங்களும் விரதங்களும் இம்மாதத்தில் களை கட்டுகின்றன. ஆனால் ஆடியின் சிறப்பு வெறும் மத நம்பிக்கை சார்ந்ததாகத் தொடங்கப்படவில்லை. ஆடிப் பட்டம் தேடி விதை, ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் போன்ற பழமொழிகள் நமக்கு அம்மாதத்தில் நிகழும் இயற்கை மாற்றங்களையும் சிறப்புகளையுமே உணர்த்துகின்றன.

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஏனெனில், இந்த மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி பீடங்களிலும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களுடன் விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். மேலும், அம்மன் கோயில்களில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல்... என பக்தர்கள்  விதவிதமான நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். முக்கியமாக, கோயில்களிலும் வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் போன்றவையும் நடக்கும்.






ஆடி மாதம் விசேஷ தினங்கள்

ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக் களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.

ஆடி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.

ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக் கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.

ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக் கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக் கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக் கிழமை சனிப் பிரதோஷம். அன்றைய தினம் நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.

ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.

ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் வழிபாடு கவலையைப் போக்கும்.

ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.

ஆடி மாதம் 3 மற்றும், 30ம் தேதி என, இரண்டு கிருத்திகை வருகிறது. இதனால், முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி




ஆடி அமாவாசை 

 ஆடி அமாவாசை, முன்னோர்களை ஆராதிக்க உகந்த நாளாகும். ஜோதிட ரீதியாக தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் தாய் வீடான கடகத்தில் ஒன்றாக இணையும் நாளே ஆடி அமாவாசை. பித்ரு சாபம் நீங்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய தர்ப்பண காரியங்களைச் செய்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். பித்ரு சாபம் நீங்கி பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். 
 
ஆடிப்பெருக்கு  

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி முதலான நதிக்கரைகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த நாளில் ஆறுகளில் கூடும் பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி புதிதாக திருமாங்கல்யச் சரடினை மாற்றி நதி அன்னையை வணங்குகின்றனர். ஆடி மாதத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று கூறுகின்றனர். ஆடி மாதத்தில் விதை விதைத்து தை மாதத் துவக்கத்தில் அறுவடை செய்வார்கள். 

ஆடிக்கூழ் 

உடல்சூட்டினைத் தணித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தருவது கூழ். எனவேதான் ஆடி மாதத்தில் வேப்பிலையும், கூழும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சிறப்பான நாட்களாகும். இந்த நாட்களில் அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றி கொண்டாடுவார்கள்.




இத்தகு சிறப்புமிக்க ஆடி மாதத்தை நாம் தவற விடலாமா? கிராம வாழ்க்கையில் இருந்து நகர வாழ்க்கைக்கு நாம் நகர்ந்தாலும், நாம் நம்மைச் சுற்றியுள்ள காவல் தெய்வங்களை மறக்கலாகாது.அனைவரும் அவரவர் இருப்பிடம் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு இந்த மாதம் முழுதும் செவ்வாய்,வெள்ளி அன்று செல்லுங்கள். தங்களால் முடிந்த அளவில் ஏதேனும் உதவி செய்யுங்கள்.ஏனெனில் அவள் இட்ட பிச்சையில் தான் இந்த வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ளது.கோவில் கைங்கர்யத்தில் கண்டிப்பாக பங்கு பெறுங்கள்.தங்கள் பகுதியில் உள்ள ஆடி  மாத விழாக்கள் பற்றிய செய்திகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவற்றை நாம் இங்கே இனிவரும் பதிவுகளில் பகிர்வோம்.

தொடர்புக்கு : 7904612352 / 96772 67266

வாருங்கள்.அம்மன் புகழை ஒலிக்கச் செய்வோம்.



No comments:

Post a Comment