Subscribe

BREAKING NEWS

19 July 2017

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும்



'ஏய் உனக்கென்ன குறைச்சல், கையும் காலும் நல்லாத்தானே இருக்கு'' என்ற வசை காதில் கேட்காத நாள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் தாங்க முடியாத அளவு தொல்லையாகவே இருக்கிறது. என்றாலும், பொறுமையாகவே இருந்துவிடுவேன். ஏன் இவர்கள் வேலைக்கு போவதில்லை ? யோசித்துப் பார்த்தால், அது அவர்கள் வினையின் பலன் என்றே கூறலாம். வேலை செய்ய வாய்ப்பு இருந்தும், உடலில் தெம்பு இருந்தும் மான, அவமானங்களைக் கருத்தில் கொள்ளாது பிச்சை எடுப்பவர்களைக் கண்டால் நான் இவ்வாறே நினைத்துக் கொள்வேன். உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு தவறாமல் என்னால் முடிந்த உதவிகயைச் செய்வேன். மற்றவர்களுக்கு முடிந்தால் செய்வேன்.






இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் என் குரு நாதர் சொல்வார், உலகில் எந்த காரியத்தைச் செய்தாலும் அது இரண்டு விளைவுகளை உண்டு பண்ணும். அது இயற்கையின் நீதி. ஆனால், எதிர் விளைவே ஏற்படுத்தாத ஒரே காரியம் தருமம் மட்டுமே. தருபவருக்கும், பெறுபவருக்கும் பாவம் தீரும். அதாவது ''நீ செய்த பாவத்துக்கு பிச்சையெடுப்பாய்'' என்று சொல்லக் கேட்கிறோம் அல்லவா ? அதுதான், பிச்சை எடுப்பதால் அவர் பாவம் குறைகிறது. தருபவருக்கு தருமம் செய்வதால் பாவம் குறைந்து விடுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நம் பாவம் தீர பிச்சை எடுப்பவர் உதவுகிறார். அதற்கு நாம் அவருக்குக் கடமைப்படுகிறோம். சிலர் தத்துவமாக நாம் பிச்சையிடுவதால் அவர்களை சோம்பேறியாக மாற்றுகிறோம் என்பார்கள். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் கூட சில சூழ்நிலைகளில் பிச்சை எடுக்க நேரிடும். நான் ஒரு முறை அப்படி மாட்டிக் கொண்டு பிறரிடம் உதவி கேட்டு(பிச்சையெடுத்து) பயன் அடைந்திருக்கிறேன். ஒருவரிடம் கையேந்தி கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் இருப்பது கூட பிச்சைதான். நம்மில் பலர் இந்தத் தவறைச் செய்கிறோம். எல்லா வகையிலும் தருமம் உயர்வானது என்றாலும், பசிக்கு உணவிடுவது மிகப் பெரிய தருமமாகும்.






நாம் கோவிலில் பிரசாதம் என்று பெற்றுக் கொள்வது கூட ஒரு தரும காரியமே. தன் பாவம் தீர ஒருவர் தெய்வத்தின் முன்னிலையில் நமக்கு அதைத் தருகிறார். அது அவருக்கும், பெற்றுக் கொள்ளும் நமக்கும் பாவத்தைக் குறைக்கும். ஆனால் நமக்கு வீட்டில் உணவு இருக்கும் போது நிறைய ஏழைகளின் வரிசையில் நின்று அவர்கள் உணவை பங்கிட்டுக் கொள்வது முறையாகாது. அன்னதானத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்றால், கலியுகத்தில் மனிதனின் பாவத்தை போக்கும் சிறப்பு அன்னதானத்திற்கு உண்டு(பசித்தவர்களுக்கு உணவிடுதல்).
கிருதயுகத்திலே உயிர் எலும்பைப் பற்றிக் கொண்டிருக்கும்.
திரேதாயுகத்திலே உயிர் நரம்பைப் பற்றிக் கொண்டிருக்கும்.
துவாபரயுகத்திலே உயிர் உதிரத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்.
கலியுகத்திலே உயிர் அன்னத்தைப் பற்றிக் கொண்டிருக்கும்.
என்பது சான்றோர் வாக்கு.








அந்த அடிப்படையில் அன்னதானம் செய்வது நம்மைக் கலியுகத்தின் பாவக் குழியில் விழாமல் காக்கும் தரும காரியமாகும். நாம் செய்த தருமமானது நம்மை தவறான வழியில் போகவிடாமல் தடுத்து, பாவத்தைச் செய்யவிடாமல் தடுத்துக் காத்தருளும்.


''தானமும் தவமும் தான் செய்வாராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.'' என்பது ஔவையின் அமுத வாக்கு. ''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்று மணிமேகலை கூறுகிறது. உணவு இல்லையேல் உயிர் வாழாது. உலகிலுள்ள பல நோயைப் பலகாலம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பசி எனும் நோய் மிகவும் கொடூரமானது. பசி அரசனுக்கும் உண்டு, ஆண்டிக்கும் உண்டு.
''மானம் குலம் கல்வி வண்மை பொருளுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனில்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் !'' என்று தமிழ் மூதாட்டி அருமையாகப் பசியின் கடுமையை விவரிக்கிறார்.



''அற்றார் அழி பசிதீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.''
ஒருவன் பெரிய தனவந்தனாக இருக்கிறான் அவனைப் பார்த்து ''கொடுத்து வைத்தவன் சுகமாய் வாழ்கிறான்'' என்கிறோம் அல்லவா ? அது இதுதான் முற்பிறவியில் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் மேலாக அன்னமும் கொடுத்து வைத்ததினால் இப்பிறவியில் கோடீஸ்வரனாக வாழ்கிறான்.



''மண்ணார் சட்டி கரத்தேந்தி
மறநாய் கவ்வும் காலினராய்
அண்ணாந் தேங்கி இருப்பவரை
அறிந்தோம் சிலரை அம்மம்மா !
பண்ணார் மொழியார் பாலடிசில்
பைம் பொன்கலத்தில் இனிதுஊட்ட
உண்ணாதிருந்த பொழுது ஒருவருக்கு
உதவா மாந்தர் இவர்தாமே.''
இந்தப் பாடலைப் பலமுறை படியுங்கள். பசிக்கு வந்த வறியவர்க்கு உதவாதவன் மறுபிறப்பில், பசி நோய் வாட்ட வீடுதோறும் சென்று பிச்சை எடுத்து அலைவான் என்று உணர்க. இந்தப் பாடல் என்ன சொல்கிறதென்றால், உடைந்த மண் ஓட்டைக் கையில் ஏந்திக் கொண்டு, புண் உள்ள காலை மேலும் நாய்கள் சுற்றி சுற்றி வந்து கடித்தவாறு பின் தொடர, அம்மா !அம்மா! என்று கூவி ஒருவன் பிச்சை எடுக்கிறானே அவன் யார் தெரியுமா ? மாடி வீட்டில் ஏர்கண்டிஷன் அறையில் பட்டு மெத்தையிட்ட ஆசனத்தில் அமர்ந்து, அன்பும், அழகும் உள்ள மனைவி தங்கக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டும் போது, வெளியே நிற்கும் பிச்சைக்காரனைப் பார்த்து காவலாளியை அழைத்து அந்தப் பிச்சைக்காரனை அடித்து விரட்டு என்று சொன்னானே அவன்தான் இவன்.
ஒரு ஞானிக்கு தினையளவு உணவு தந்தாலும், மலையளவு புண்ணியம் கிட்டும். ஆனால், ஞானி என்பதை எவ்வாறு கண்டு கொள்வது ? வந்தவர்க்கெல்லாம் ஒரு கவளம் உணவு வழங்கினால், ஒரு நாளைக்கு ஒரு ஞானியாவது வருவார்.







அன்னதானம் செய்த சிறுதொண்டநாயனாரின் இல்லம் தேடி சிவபெருமானே உணவு உண்ணப் போனார்.
அன்னதானம் செய்து வறியவராய்ப் போன இளையான்குடி மாறன் நாயனாரைத் தேடி நடுஇரவில் பரமசிவமே பசி என்று போய் அவரை ஆட்கொண்டருளினார்.
ஈயாது இரும்புப் பெட்டியில் வைத்தது நமக்கு உதவாது. வயலில் இட்ட நெல் ஒன்றுக்கு நூறாய் விளைவதைப் போல ஏழைகளுக்கு இட்டது ஆயிரம் மடங்காய் பெருகி வந்து உதவும்.
ஒருவருக்கு வேட்டி கொடுத்தால் முழம் அளந்து பார்த்து, நீளங்காணாது என்பான். பணமாக ஆயிரம் கொடுத்தால், மேலும் வழிச் செலவுக்குத் தாருங்கள் என்பான். ஆனால் இலை விரித்து, இலை நிறைய அன்னமிட்டு உதவினால் வயுறு நிறைய, மனங்குளிர போதும் போதும் என்று சொல்லி வாழ்த்துவான். அதனால் அவன் ஊன் குளிர்கிறது, உள்ளம் குளிர்கிறது, உயிர் குளிர்கிறது எனவே உயிருக்கு உயிரான சிவமும் குளிர்கிறது. ஆகவே அன்னதானம் எவ்வளவு சிறந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.









அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை.
அன்னதானத்தைப் பற்றி “நீங்கள்அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள்.


உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.
கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.
ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள்.
உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான்.
அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது”
- என்றார் பகவான்

பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிறைய , அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சோல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும்.
பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.
அதனால்தான் ஔவையார்

“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. “ - என்றார்.

நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.
வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது.
அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.
ஆதலால் நண்பர்களே, அன்னதானம் செயவதை நம் வாழ்வின் கடமையாக ஏற்போம். நம்மால் முடிந்த அளவுக்குப் பசிப்பிணியாற்றுவோம்.

எல்லாம் சரிதான் நம்ம கதையே கந்தலாகிக் கிடக்கிறது. இதில் தானம் செய்ய முடியுமா ? என்று கேட்டால், ஒன்று சொல்கிறேன். உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும்.

நன்றி : திரு. ராம் மனோகர்
TUT குழுமம் வாயிலாக நடைபெற்று வரும் அன்னதான படங்கள் இந்த பதிவில் இணைக்கப் பட்டுள்ளது.

முந்தைய பதிவிற்கு :

எங்களின் ஓராண்டு பயணம்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


No comments:

Post a Comment