Subscribe

BREAKING NEWS

14 November 2017

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5)

நம் TUT தளத்தில் வாழ்வாங்கு வாழ என்ற  தொடர் பதிவு கேள்வி-பதில் வடிவில் நாம் தொடர்வது அனைவரும் அறிந்ததே.சென்ற பதிவில் ஆறு  கேள்விகள் பார்த்தோம்.ஆறு கேள்விகளுமே அறிவை மேம்படுத்தும்  என்று நம்புகின்றோம். பதிவின் இறுதியில் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை இணைத்துள்ளோம்.படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். ஏற்கனவே படித்தவர்களும் ஒரு முறை படிக்கவும்.மீண்டும் மீண்டும் மனதுள் இந்த செய்திகளை அசை போட்டால் தான் வாழ்வாங்கு வாழ நம்மால் முடியும். சென்ற பதிவில் உடல்,உயிர்,மனம் போன்ற செய்திகளுடன் குரு, சத்குரு, சற்குரு, சித்தர்கள், மகான் போன்ற விளக்கங்கள் பார்த்தோம், சாகாக்கலை பற்றி சிறிது தொட்டு காட்டினோம்.அதிலும் கடைசி கேள்வியும் அதற்கான பதிலும் இருக்கின்றதே, மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்த வேண்டிய ஒன்று.
இவற்றையெல்லாம்  தெரிந்து,உணர்ந்து கொண்டாலே வாழ்வாங்கு வாழ்வது சாத்தியமே.

சரி. இந்த மாத சில கேள்விகளும், வாழ்வாங்கு வாழ்வதற்கான பதில்களும் இதோ...

முதலில் மௌனத்தின் குரல் பற்றி 


கேள்வி - மௌனம் என்றால் பேசாமல் அமைதியாக இருப்பதுதானே ! நீங்கள் ''மௌனத்தின் குரல்'' என்று சொல்வது முரண்படுகிறதே ?

இராம் மனோகர் - ஹா... ஹா.... ஹா... இப்பொழுதுதான் நான் ரொம்பப் பேசப் போகிறேன். நண்பரே மௌனம் வலிமையானது. ஆழ்கடலைப் போல அழுத்தமானது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரிதம் உண்டு. அது போல மௌனத்திற்கும் ரிதம் உண்டு. ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது SILENCE SPEAKS LOUDER THAN WORDS என்பார்கள். ஒரு சிறிய விதைக்குள் எப்படி விருத்திகள் அனைத்தும் ஒடுங்கிக் கிடக்கின்றனவோ ! அது போல அலைகள் அனைத்தும் மௌனத்தில்தான் ஒடுங்கி நிற்கின்றன. மௌனத்தில் இருந்தான் நாதம் வந்தது. மௌனத்தில் இருந்துதான் குரல் வந்தது. அதற்கு முன் அவை அங்கேதான் இருந்தன. மௌனத்தின் குரலை மௌனத்தில்தான் உணர முடியும். எவ்வளவு அதிகமான ஓசைகள் எழும்பினாலும், சில இடங்களில் போய் அமர்ந்தால் நம் மனம் மௌனமாகி விடுகின்றதே ! அது எப்படி ?





கடற்கரையில் போய் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அங்கே ஆர்ப்பரிக்கும் அலைகளின் பேரிரைச்சல் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அடர்ந்த வனங்களுக்குள் போய் அமர்ந்து கொண்டு தியானம் செய்கிறார்கள். அங்கேயும் சலசலவென இலைகள் பேரிரைச்சலை ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனம் அவற்றை உணர்வதில்லையே ! அமைதியாக, மௌன நிலையில் தவம் செய்கிறார்களே! அது எப்படி ? ஏனென்றால் அந்த ஓசைகளில் குழப்பமில்லை. எண்ணற்ற ஓசைகள் அங்கே முட்டி மோதிக் கொண்டு நம் மன அமைதியை குலைப்பதில்லை. ஒரே கதியில் சீராக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே நம் மனமும் எளிதில் ஒரே எண்ணத்தில் நிலை பெற்று நிற்க முடிகிறது.

எப்படி ஒரே எண்ணத்தில் நிலைத்திருப்பதை மௌனம் என்று சொல்கிறோமோ, அது போலவே ஒரே கதியில் ஒலிக்கும் ஓசை கூட மௌனம்தான். பிரபஞ்சம் கடந்து வானவெளிக்குப் போனால் இந்த மௌனமான ஓசையைக் கேட்கலாம். அந்த ஓசை மௌனத்தைப் போலவே அழுத்தமானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். அந்த ஓசையின் அதிர்வு நம் உயிரின் அடி வேர் வரை போய் பரவி நம் அகங்காரத்தை அசைத்துப் பார்க்கும். எனவே மௌனத்திற்கு குரலோ, ஓசையோ, அலையோ இல்லை என்று எண்ணி விடாதீர்கள். எல்லாம் அதற்குள்தான் ஒடுங்கிக் கிடக்கின்றன. சரி நம் விஷயத்திற்கு வருவோம்.

மௌனத்தின் குரல் அதாவது மௌனத்தின் ஒலி என்று சொல்லும் பொழுது ப்ரணவத்தை சுட்டிக் காட்டுவார்கள். ப்ரணவ ஒலியானது மனதை அமைதிப்படுத்தும். அந்தப் பரணவ ஒலியிலிருந்தே மற்ற எல்லாம் வந்தன என்று சொல்வார்கள். ப்ரணவ ஒலியின் பாங்குடைய ஓசைகள் மனதை அமைதிப்படுத்தும். அதற்கு உதாரணமாக கடலின் ஓசை, வனத்தில் காற்றில் அசையும் மரங்களின் ஓசை, சங்கின் ஓசை இது போன்று பல ஓசைகள் ப்ரணவத்தின் பாங்கிலேயே அமைந்துள்ளன. எனவேதான் வனங்களிலே போய் தவம் செய்கிறவர்களை அந்த ஓசை சலனப்படுத்துவது இல்லை. மேலும் அமைதியைத் தீவிரப்படுத்துகிறது.

கடற்கரையில் போய் அமர்ந்தால் மனம் அமைதியாக இருக்கிறது என்று சொல்லக் கேட்கிறோம். ஆனால், கடலோ ஓயாது அலையடித்து இரைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், அந்த ஓசையில் ப்ரணவத்தின் பாங்கு மிகுந்திருப்தால், அவ்வளவு இரைச்சலையும் தாண்டி மனம் அமைதி அடைகிறது. மேலும் கடற்கரையில் எந்தத் தடையுமின்றி காற்று வேகமாக வந்து நம் காது மடல்களில் மோதி துளையினுள் நுழையும் போது சங்கின் ஓசை கேட்கிறது. அதுவும் ப்ரணவத்தின் பாங்குடைய ஓசையே. எனவே கடற்கரையில் மன அமைதி அதிகரிக்கிறது. இதே பின் நோக்கிப் போகும் போது ஒன்றிலிருந்து ஒன்று என்று எல்லாம் தோன்றியிருந்தாலும், எல்லாம் ப்ரணவமாகிய ஓசையிலிருந்தே வந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவேதான் நாத ப்ரம்மம் என்கிறார்கள்.
அந்த ப்ரணவமாகிய ஓசை எங்கிருந்து வந்தது. அது பரப்ரம்மத்திடமிருந்து வந்தது. அந்தப் பரப்ரம்மமோ மௌனமே வடிவானது. ஆக மௌனம் என்றால் இறைவன். அவரின் குரல் எது ? அது வேதம்(ஸ்ருதி). வேதம் என்ன சொல்கிறது ? வேறொன்றும் சொல்லவில்லை, எல்லாவற்றையும் கடந்து மௌனத்தில் நிலைபெறவே சொல்கிறது. மௌனம் என்றால், இருபத்தி நான்கு தத்துவங்களும் அடங்கி நிற்பதுவே மௌனம். நாம் பொதுவாக பேசாமல் இருப்பதுவே மௌனம் என்கிறோம். பேசிக் கொண்டே இருப்பவரின் மனதில் அசாந்தி நிலவுகிறது. பேச்சுக் குறையும் அளவிற்கு மனம் சாந்தி அடைகின்றது. பேசியே ஜெயிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது ஆன்மிக வெற்றி ஆகாது. நுணலும் தன் வாயால் கெடும் என்ற நாலடியார் பாட்டு சொல்வதைப் போல, பேசியே கெட்டவர்கள்தான் அதிகம்.முறை தவறி வாயைப் பயன்படுத்திக் கெட்டுப் போனவர்களே பேயாக அலைகிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேடு விளைவித்துக் கொள்வதோடு, பிறர்க்கும் இன்னல் விளைவிக்கின்றனர்.

அத்தகைய வீண் பேச்சாளர்களுக்கும் பேரின்பத்திற்கும் வெகு தூரம். நிறைகுடம் ததும்புவதில்லை. அறிவிற் சிறந்தவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். கிணற்றின் வாயை சுற்றுச் சுவர் கட்டி பாதுகாக்காவிட்டால் காற்று மற்றும், விலங்குகள், மனிதர்களால் கிணறு மாசுபட்டு கிணற்று நீர் வீணாகி விடும் அது போல, மனிதனும் தன் வாயைக் கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இரண்டு காரியங்களுக்கு இந்த வாயானது உதவுகிறது. ஒன்று உணவு மற்றொன்று பேச்சு. உணவைப் பொருத்தமான வேளையில் அளவாக உண்பவன் உத்தமனாக வாழ்கிறான். அதையே அளவு கடந்து புசித்து விட்டு தன் உடல் வாழ்வைப் பாழ்படுத்துபவன் அதமனாகிறான். மற்றொன்று பேச்சு. அளந்தெடுத்துப் பொருத்தமான சமயத்தில் தக்கவர்களிடம் மட்டும் பேச மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அல்லாதவர்கள் துன்பப்பட நேரிடும்.

தவத்தில் நாட்டம் அதிகரிக்கும் அளவிற்கு ஒருவனிடம் பேச்சற்ற நிலை அதிகரிக்கிறது. யோகத்தைப் பொருத்த வரை முதற்கட்டமாக அமைவதே சொல்லையும், செயலையும் ஒன்று படுத்துவதுதான். உள்ளத்தில் இருப்பதுதான் உரையாக வடிவெடுத்து வரும். ஆனால், பெரும்பாலனவர்களுக்கு அவ்வாறு நடைபெறுவது இல்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உறவை எனக்கு ஏற்படாமல் செய் என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுகிறார். இதையேதான் அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ண பரமாத்மா ''நீ பண்டிதன் போல் பேசுகிறாய், பாமரன் போல் விசனப்படுகிறாய்'' என்று சொன்னார். இங்கே சிந்தைக்கும், சொல்லுக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இரண்டுக்கும் பொருத்தமில்லை. இரண்டையும் பொருந்தும் படிச் செய்வதே யோகத்தின் முதற்கட்டம்.

அதற்குப் பிறகு செயலையும் அதனோடு பொருத்தும் போது திரிகரணங்களும் ஒன்றுபடுகின்றன. திரிகரணங்களும் ஒன்றுபடுத்துபவர்களுக்கே மௌனம் வாய்க்கும். முக்தி கிட்டும். முக்தி என்றால் விடுதலை. அதாவது பிரபஞ்சக் கூறுகளாகிய உடல் மற்றும் உள்ளத்தினின்று விடுதலை அடைவது. மனம் கூத்தாடும் போது அது சொல்லாக வடிவெடுக்கிறது. மனம் ஒடுங்க ஒடுங்க எண்ணங்கள் குறைகின்றன. அதைத் தொடர்ந்து பேச்சும் குறைந்து விடுகின்றது. பேச்சற்ற நிலையிலேயே ஆனந்தம் இருக்கிறது. தூங்கும் போது யாரும் பேசுவதில்லை. எனவேதான் ஆனந்தமாகத் தூங்கினேன் என்கிறார்கள். ''ஆனந்தம் ப்ரம்மம்'' என்பது வேத வாக்கு. எனவே மௌனமே ஆனந்தம் என்பதுவே மௌனத்தின் வாக்கு. அதாவது மௌனத்தின் குரல்.

பிரபஞ்ச வாழ்வைப் பொருத்த வரை பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பவனும், பேசாமல் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் பேசிக் கொண்டிருப்பவனும் துன்பத்தையே அடைவான். வியாபாரத்தில் தேவைக்கேற்ப இன்முகத்தோடு பேச வேண்டும். பிரச்சனைகள் வரும் பொழுது சபையில் நன்கு யோசித்து அறிவுப்பூர்வமாகப் பேச வேண்டும். ஒரு ஆசிரியர் பாடத்தை விளக்குவதற்காக மாணவர்கள் முன் தெளிவாகப் பேச வேண்டும். இப்படி பேச வேண்டியவர்கள் பேசியே ஆக வேண்டும். இது உலகாய வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயம். அது போலவே பேசாமல் இருக்க வேண்டிய அல்லது இருந்து விட வேண்டிய இடங்களும், சந்தர்பங்களும் நிறைய உண்டு. அப்பொழுது பேசாமல் மௌனமாக இருப்பதுதான் நல்லது.
ஆனால், நான் இங்கே என் முகநூல் பக்கங்களில் மௌனத்தை முன்னிறுத்திப் பேசுவது புறவுலக விஷயங்களைக் குறித்து அல்ல. இது ஆன்மீகம். உள்முகமானப் பயணம். இதில் மௌனமே பாதையாக அமைந்திருக்கிறது. மௌனம் கலைந்த மனம் பாதை மாறிப் போய்க் கொண்டே இருக்கும். இலக்கை எட்ட முடியாது. இதைத்தான் தாயுமானவர் ''சொல்லும், பொருளுமற்றுச் சும்மா இருப்பது'' என்பார். மேலும் ''அதுவே அல்லும், பகலும் எனக்கு ஆசை பராபரமே'' என்பார். சொல்லால் அமைவது மொழி. மொழியால்தான் மனிதன் கருத்துக்களை ஏற்கவோ, பிறருக்கு வழங்கவோ முடியும். மொழியே இல்லாத மனிதன் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுவான். உலகாய வாழ்வில் பற்று உள்ளவர்களுக்கு இந்நிலை பொருந்தாது. கொடுமையான குற்றம் புரிந்தவர்களைத் தனிமைச் சிறையில் அடைப்பது வழக்கம்.

அதன் கொடுமை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். ஆனால், ஆன்ம பரிபாகம் அடைந்த ஒருவரிடம் கேட்டால் அதை விட ஆனந்தம் எதுவுமில்லை என்பார். இதைத்தான் ''இனிது இனிது ஏகாந்தம் இனிது'' என்று ஔவை குறிப்பிடுவார்.

சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது. தாகத்தில் தவிக்கிற ஒருவனிடம் போய் தண்ணீர் என்று சொன்னவுடன், அதற்கேற்ற சித்தவிருத்தி அவனிடத்தில் உருவாகி விடும். இன்னும் தாகம் அதிகரித்து விடும். சித்த விருத்திகள் என்பது தடாகத்தில் அலைகள் அடிப்பதைப் போன்றது. அலையடிக்கிற தடாகத்தின் அடிப் பகுதி காட்சிக்குத் தெரியாது. அது போல விருந்தி மயமாய் இருக்கும் மனதிற்கு தனக்கு ஆதாரமாய் இருக்கும் ஆத்ம சொரூபம் அனுபவத்திற்கு எட்டாது. உலகாய வாழ்வைப் பொருத்த வரை சொல் ஒரு பெரிய பந்தபாசமாகின்றது. ஏனென்றால், அதைக் கேட்கும் பொழுதெல்லாம் அதற்கு ஏற்ற விகாரத்தை மனம் எடுக்கிறது.

சொல்லின் வாயிலாக அதன் கருத்தை ஏற்கும் பொழுதுதான் மனிதர்கள் இன்பதுன்ப நுகர்ச்சிக்கு ஆளாகிறார்கள். பிறர் போற்றுவதை இன்பம் என்கிறார்கள். தூற்றினால் துன்பம் என்கிறார்கள். மனம் ஒடுங்கிய நிலையில் உள்ளவர்களுக்கோ சொல் பொருளற்றதாக ஆகி விடுகின்றது. மனதை வென்றவர்களுக்கே மௌனம் சாத்தியப்படுகிறது. மனமடங்கிய நிலையையே சும்மா இருப்பது என்கிறார் தாயுமானவர். இரவும் பகலும் சொல்லை ஒதுக்கித் தள்ளுபவர்களே மௌனத்தில் நிலைக்கிறார்கள். அவர்கள் பேசுவதுமில்லை, பிறர் பேசுவதை பொருட்படுத்துவதும் இல்லை. அத்தகைய மௌனத்தில் தீவிரமாக ஈடுபடும் பொழுது சித்த விருத்தி தானாக ஒடுங்கி விடுகின்றது. சித்த விருத்தி என்ற அலையடிக்காத மனதிற்கு ஆன்ம தரிசனமும் வாய்க்கிறது. இத்தகைய பெருநிலை வாய்க்க நாம் மௌனத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நான் இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் மௌனத்தில் நின்றே பேசுகிறேன். நான் பேசவில்லை. மௌனமே பேசுகிறது.



நண்பர் - தியானத்தினால் பழைய வினைகள் அழிந்து விடும் என்றால், நம் நல்ல வினைப்பதிவுகளும் (புண்ணியம்) அழிந்து விடும் அல்லவா? ஆனால் பட்டினத்தார் ''பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே'' என்று சொல்கிறாரே ?


இராம் மனோகர் - வினைகளை வேரறுப்பது என்பது இறுதி கட்டமாகும். அதாவது இறுதி கட்டம் என்றால், தியானத்தின் மேல் மட்ட நிலைகளில் நிகழக் கூடியது. அது வரையிலும் மனம் கொண்டுள்ள சம்ஸ்காரங்களாகிய பழைய வினைப் பதிவுகளின் தாக்கத்திலிருந்து விடுபடவே நாம் முயற்சி செய்கிறோம். இதற்கிடையே அவ்வப்பொழுது நம் தியானத்தின் ஆழத்தில் செல்லும் பொழுது க்ஷண நேரம் இணைப்பு நேர்ந்து விடுவதுமுண்டு. அந்த இணைப்பு ஏற்படும் பொழுதெல்லாம் நம் பதிவுகள் சிறிது சிறிதாகக் கரைந்து போவதும் உண்டு. ஆனால், அது நீடிப்பதில்லை. அதை நீட்டிக்கச் செய்வதையே தியான அனுபூதி என்பார்கள். பேராற்றலோடு நம் உயிராற்றலை கலக்க விடும் பொழுதுதான் வினைகளை வேரறுக்க முடியும். இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். சராசரி மனிதன் பிறப்பிறப்பில் உழலும் பொழுது அவனைப் பற்றித் தொடர்வது இரு வினைகளான பாவமும், புண்ணியமும் என்றுதான் அவர் சொன்னார்.
வினைப் பதிவுகளைப் பொருத்த வரை இறைநிலைக்கு நல்ல பதிவுகள், கெட்ட பதிவுகள் என்றெல்லாம் பேதமில்லை. நம்மைப் பொருத்த வரை பழைய பதிவுகள்தான் நம் நடத்தையை, நம்முடைய ஜீவிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை. அதே சமயம் ஒரு காலத்தில் நல்லது செய்யும் பொழுது ஏற்பட்ட பதிவாக இருந்தாலும் கூட அது இன்றைய சூழலில் எண்ணமாகக் கிளம்பி, செயலாக மலரும் பொழுது தீய விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே வினைகளை வேரறுக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாகிறது. அதனால்தான் ஔவை பிராட்டி ''இரு வினை தன்னை அறுத்திருள் கடிந்து'' என்பார். அந்த வகையில் பார்க்கும் பொழுது இறந்த காலம் என்பது நம் தலை மேல் நாமே ஏற்றி வைத்துக் கொண்ட ஒரு பெருஞ்சுமையாகவே இருக்கிறது.

பற்றாக் குறைக்கு ஒவ்வொரு நொடியும் மேலும் மேலும் புதுப்புது பதிவுகளை உண்டாக்கி சுமையை ஏற்றிக் கொண்டே போகிறோம். ஒவ்வொரு நொடியும் நொடிப் பொழுதில் இறந்தகாலமாகிக் கொண்டேதானிருக்கிறது. கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் இறந்த காலத்தின் மற்றொரு நொடியாகக் கூடி விடுகிறது. தொடர்ந்து இயங்குவதாலும், சிந்தித்துக் கொண்டே இருப்பதாலும் நாம் மீண்டும் மீண்டும் பதிவுகளை உருவாக்கிப் பதிய வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்படி புதிய சுமைகளை உருவாக்காமல் இருக்கவும், பழைய சுமைகளைக் குறைக்கவுமே தியானம் தேவைப்படுகிறது. அதாவது மனமானது அதன் இயக்கத்தில் தூய்மைபடுத்தப்பட்டு ஒழுங்குபடுவதற்கு தியானம் உதவுகிறது. இதனால் புறச் செயல்களும் ஒழுங்குபடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

தியானம் என்பது வழிமுறைதான். அதன் பலன்தான் மனக்குவிப்பாகும். இந்த மனக்குவிப்பினால் என்ன நடக்கிறது ? மனக்குவிப்பினால் நமக்கு மன வலிமை ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத அல்லது விரும்பத் தகாத சிந்தனைகளை நம்மால் ஒதுக்கி விட முடிகிறது. இதுவே பழக்கமாகும் பொழுது மனதிற்கு இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டும் அதாவது நாம் ஈடுபடும் செயலில் மட்டும் ஒருமுகப்பட்டு நிற்கும் ஆற்றல் வாய்த்து விடுகிறது. எனவே வேறு எண்ணங்களோ, எண்ணத் தடைகளோ ஏற்பட வழியில்லாமல் போய் விடுகின்றது. ஒரே எண்ணத்தோடு செய்யப்படுவதால் நாம் செய்யும் அந்தக் காரியமும் வெற்றி பெறுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் தியான முயற்சியினால் நாம் நம் புறச் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதோடு, புதிய எண்ணங்களைக் குறைத்து, புதிய மேல் பதிவுகளை ஓரளவு தவிர்த்து விடுகிறோம். தியான அனுபூதியினால் பழைய வினைப் பதிவுகளை நீக்குகிறோம்.


ஐயம் 1- ஐயா ஒரு சந்தேகம். எல்லாவற்றிற்கும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் தருகிறீர்கள். யோகம், ஞானம் பற்றி நிறையப் பேசுகிறீர்கள். ஆனால், சித்தர்கள் மறுத்துப் பாடியுள்ள பக்தி மார்க்கத்தை நியாயப்படுத்துகிறீர்கள். இது எனக்குப் புரியவில்லை.


ஐயம் 2- பக்தி மார்க்கத்தால்  மட்டுமே எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா ?



இராம் மனோகர் - எல்லாம் புரிந்து விட்டால் பிறகு நமக்கு இங்கு என்ன வேலை ? புரிதல் என்பது அவரவர் அறிவின் நிலையை ஒத்து அமைகின்றது. உங்கள் அறிவுக்கு புலப்பட்ட அல்லது அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு எளிதில் விளங்கும். ஆனால், உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயத்தைப் பற்றி மற்றவர்கள் பேசும் பொழுது இது போன்ற குழப்பங்கள் மனதில் எழுகின்றன. சில நேரங்களில் அறிவுக்கு எட்டினாலும் கூட சில செய்யத் தகாத செயல்களை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். காரணம் மனம் பக்குவப்படவில்லை என்பதால்தான்.மேலே நின்று பார்ப்பவனுக்கு எல்லாம் சமமாகத்தான் தெரியும். ஆனால், நாம் கீழே அல்லவா நின்று கொண்டிருக்கிறோம். முக்திக்கான உபாயங்களாக நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டுவது நான்கு வழிகளை. சரியை(பக்தி), கிரியை(கர்மம்), யோகம், ஞானம். என்கிற நான்கு வழிகள். இதில் பக்திதான் முதலில் வருகின்றது.

பக்தி என்பது குற்றமான செயலா என்ன ? அதை நான் வந்து இங்கே நியாயப்படுத்துவதற்கு. எல்லா சமயத்தினரும் இறைவன் மீது பக்தி செலுத்தத்தான் செய்கிறார்கள். மேலும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனிதனுக்கு பக்தி யோகம் ஒரு எளிய உபாயமாகவும், நல்ல ஆரம்ப நிலையாகவும் இருக்கிறது. எல்லோருமே ஆன்ம விசாரம் கொண்டு யோக, ஞான மார்க்கத்தை கடைபிடித்து விட முடியாது, எல்லாமே தெரிந்திருந்தாலும் மனம் பரிபக்குவம் அடையும் வரை ஒருவன் யோகத்திலோ, ஞானத்திலோ முன்னேற முடியாது. எல்லாம் தெரிந்தவர் ஞானியல்ல. தெரிந்து, தெளிந்து அதை உணர்ந்தவரே ஞானி. சராசரி மனிதனானவன் தன் மனதைப் பக்குவப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு யுக்தியே பக்தி மார்க்கம் என்பது. புலன் மயக்கம், பற்று, பாசம் இவற்றிலிருந்தெல்லாம் மனதை சிறுகச் சிறுகப் பிரித்தெடுத்து இறைவன் பாற் செலுத்துகின்ற யுக்தியே பக்தி. ஆனால், அந்த பக்தியின் மூலமாகவே பிரபஞ்ச வாழ்வின் தேவைகளை, இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பதும், மேலும் மேலும் பற்றுகளை வளர்த்துக் கொண்டே செல்வதையும்தான் சித்தர்கள் கண்டிக்கிறார்கள்.

ஆற்றைக் கடக்க ஒரு படகில் ஏறுகிறோம். கடந்த பிறகு மேலும் நாம் காரியங்களை நோக்கிப் போக வேண்டியதுதானே முறை. அதை விடுத்து யாராவது இந்தப் படகுத்தான் ஆற்றைக் கடக்க உதவியது. எனவே, இந்தப் படகை மறக்கக் கூடாது என்று சொல்லி, தலையில் வைத்துக் கொண்டு போவார்களா ? அது போலவே பக்தி என்பது ஒரு உபாயம். மனதை நெறிப்படுத்த, ஒரு நிலைப்படுத்த, சத்துவ குணத்தை நிலைக்கச் செய்து மற்ற இரு குணங்களை மட்டுப்படுத்த உதவும் ஒரு உபாயம். அதில் முறையாக ஈடுபட்டு, அடுத்த நிலைக்குப் போக வேண்டுமே அல்லாது, அதனோடும் பற்று கொண்டு அடுத்த நிலையை மறந்து விடலாகாது என்பதே சித்தர்களின் கருத்து. அதைத்தான் ஈசனோடாயினும் ஆசையை அறுமின் என்றார்கள். எனவே பக்தி மார்க்கம் என்பது கட்டாயத் தேவையாகும். கல்லைக் கூடக் கடவுளாக ஒருனுக்கு காண முடியுமானால், அவன் மனதில் பேதமற்றவனாகி விடுகிறான். இங்கு காணும் யாவும் கடவுளே என்ற நிலைக்கு உயர்ந்து விடுகிறான். அப்பொழுது அவன் இயம நியமங்களைக் கடந்தவனாகிறான்.
புறத் தேவைகளுக்காக கடவுளை நாடுபவனுக்கு இத்தகைய நிலை வாய்க்காது. தன் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் என்ற வேட்கை கொண்ட உண்மையான பக்தி உள்ளவர்களுக்கே இந்நிலை வாய்க்கும். உண்மையான பக்தியுடையவன் கடவுளை எண்ணி தன் புலன்களை அடக்குகிறான். இதுவே பிரத்தியாகாரம் ஆகின்றது. கருவறையில் உள்ள தன் இறைவனை நோக்கி தன் மனதைச் செலுத்தி தனை மறந்து வணங்கி நிற்கிற பொழுது அது தாரணையாகின்றது. அந்நிலை நீடித்து கண்மூடி மனதிற்குள் தெய்வ தரிசனத்தைக் காணும் பொழுது அவன் மனம் தியானத்தின் அனுபூதியை அடைகின்றது. யோகி பல யுக்திகளைக் கடைபிடித்து அடைகின்ற அனுபூதியை உண்மையான பக்தியின் மூலமாக பக்தன் அடைகின்றான். அப்பொழுது அவனுக்கு ஒளி தரிசனம் கிடைக்கின்றது. அறிவில் பிரகாசம் கூடுகின்றது. தனை மறந்து தியானத்தில் திளைத்திடுகிறான். ஞானத்தை அடைகின்றான்.

ஞானத்தை அடைந்த பிறகு அவன் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கும். வெளியே குவிந்த மனது இப்பொழுது உள்ளே குவியத் துவங்கும். குவிந்து நீடித்து நிலைத்து பரவெளியில் லயித்திடும். எனவே பக்தி என்பது ஒரு படித்தரமாக இருக்கின்றது. அந்தப் படியைக் கடந்து அடுத்தப் படிக்கு ஏறிச் செல்ல வேண்டும் என்பதையே சித்தர்கள் கிண்டலாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். பக்தி, யோகம், ஞானம் எல்லாம் இறைவனை அடைய முயல்பவர்களுக்கு அமைந்தப் படித்தரங்களே. இத்தகைய உயர்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன். முதல் படி பக்தி என்றால் முடிவு முக்தியாகும். இடையே எத்தனையோ நிலைகள் இருக்கின்றன. எனவே குழப்பங்களையும், குதர்க்கமான எண்ணங்களையும் தவிர்த்து நேர்மறை சிந்தனையோடு அணுகும் பொழுது சொல்லப்படும் விஷயத்திலுள்ள உண்மைப் பொருள் தானே விளங்கும். மாறாக எதிர் மறை எண்ணங்களோடு அணுகும் பொழுது உண்மை புலப்படாது.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

நன்றி திரு.ராம் மனோகர் 

முந்தைய பதிவுகளுக்கு:-

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html


வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html





No comments:

Post a Comment