Subscribe

BREAKING NEWS

31 December 2017

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

பஞ்சபூத தத்துவத்தில் ஒன்றாய் அக்னியாக கடவுளை வணங்கும் நாளே திருக்கார்த்திகை. கார்த்திகை என்றால் முருகப் பெருமானின் அருள் இல்லாமலா? முருகனின் அவதாரமே கார்த்திகையில் மேன்மை பகிர்வதே.கார்த்திகையின் ஒவ்வொரு நாளும் புண்ணிய நாளே. இந்த முறை தவற விட்டவர்கள் அடுத்த முறை சரியாக கைக் கொள்ளவும்.

ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப் பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது. இந்த ஆறுமுகங்களும் ஐஸ்வர்யம். வீரம்.தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் என்ற ஆறுகுணங்களைக் குறிக்கின்றது.கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து வழிபடுவோர், நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

 

தாயுமானவர்,அருணகிரிநாதர் தொடங்கி வள்ளலார் வரை அனைத்து மகான்களும் தீப ஒளி வழிபாட்டை முன்னிறுத்து வருகின்றனர். பக்தியின் உச்சமும், ஞானத்தின் ஆழமும் மெய் விளக்கில் தான் தொடங்குகின்றது.


அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே 
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே 
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று  பாடி  வள்ளலார் இறைவனை ஜோதியாய் தரிசித்தார். 


இத்தகு சிறப்பு கொண்ட கார்த்திகை கொண்டாட்டத்தில், நாம் நம் TUT உறவுகளோடு குன்றத்தூர் சென்றஅனுபவ பதிவை  இருந்தோம்.இங்கே மீண்டும் தொடர்வோம்.

வாங்கிச் சென்ற இலுப்பெண்ணெய் கந்தலீஸ்வரக்குக் கொடுத்தாகிவிட்டது. மீதம் இருந்த எண்ணையை தர குன்றத்தூர் முருகன் கோவில் சென்றோம், குன்றத்தூர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அதுவும் பச்சை வண்ண ஒளிர் விளக்குகள் கண்ணைப் பறித்தன. கோயிலுள் சென்றால், சரியான கூட்டம். அங்கே தீபம் ஏற்ற தயார் செய்து கொண்டிருந்தார்கள். நம்மால் உள்ளே சென்று எண்ணெயைக் கொடுக்க முடியவில்லை. அப்படியே உள்ளே கொடுக்கும்படி, கை மாற்றிவிட்டோம். சற்று நேரத்தில், குன்றத்தூர் மலையில் தீபம் ஏற்ற, குருக்கள் மற்றும் அனைவரும் மேளதாளத்துடன் வெளியே வந்து, குன்றத்தூர் முருகனை வலம் வந்து, அப்படியே வெளியே வந்தார்கள். நமக்கு மெய் சிலிர்த்தது. விளக்கின் ஒளி, மேள தாள ஒலி, இரவின் மடி, குன்று இருக்கும் குன்றத்தூர் சொல்லவா வேண்டும்? சொல்லில் அடங்கா சொர்க்கம் இது 




 மேலே நீங்கள் பார்ப்பது, குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து ஜோதி கொண்டு வரும் கண்கொள்ளாக் காட்சி 



 தீப மேடை தயார் செய்யும் காட்சி. இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அற்புத தீபக் காட்சி. திருஅண்ணாமலை செல்ல முடியாதவர்கள் இங்கே தரிசிக்கலாம்.




குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! என்று அரோகரா நாமம் ஒலித்துக் கொண்டே இருந்தது. தீபம் ஏற்றியவுடன் வெடி சத்தம் காதைப் பிளந்தது.




குன்றத்தூர் முழுவதும் ஒளி நிறைந்து காணப் பட்டது. மீண்டும் ஒருமுறை தீப தரிசனம் பெற்றோம் 








ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

 ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.



என்ற வள்ளலாரின் வாக்கு நம் மனத்தில் ஒளிர்ந்தது. மீண்டும் மீண்டும் ஜோதியுள் உறைந்தோம்.















குன்றத்தூர் முழுதும் கோலாகலம் தான். இதோ ஒளி வெள்ளத்தில் முருகன் கோவில்.












தீபம் ஏற்ற எண்ணெய் கொடுக்க வந்த நமக்கு இப்படியொரு தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி கூறிவிட்டு, கீழே கந்தலீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.


- மீண்டும் அடுத்த பதிவில் காண்போம் 


முந்தைய பதிவிற்கு :
கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - http://tut-temple.blogspot.in/2017/12/1.html

No comments:

Post a Comment