Subscribe

BREAKING NEWS

06 March 2018

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா நம் தலத்தில் பகிர்வு செய்து இருந்தோம். ஹோமத் திருவிழா மிக மிக கொண்டாட்டமாக இருந்தது. பொதிகை வாசத்தில், நம் அரசனின் தரிசனம் சொல்வதிலே இனிமை என்றால், நேரில் பங்கேற்றால் ..அருள் என்றால் அகத்தியர் தான் என்று சொல்லும் அளவிற்கு சீரோடும், மிக மிகச் சிறப்போடும் நடைபெற்றது. அந்த ஹோமத் திருவிழாவின் நிகழ்வின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம். நம்மால் நேரில் தான் சென்று கலந்து கொள்ளவில்லை என்று கவலை வேண்டாம். இதோ இந்தப் பதிவின் மூலம்  அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.


மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் புனித நீராடலுடன் அன்றைய தினம் தொடங்கியது. தீர்த்தத்தில் பொதிகை தீர்த்தம் பற்பல சிறப்புமிக்கது, பொதிகையடியில் ஐயன் அகத்தியரின் கருணையில், அன்பின் ஆழத்தில் நம் பாவம் போக்க பாபநாசத்தில் ( பாவ விநாசம் என்றும் சொல்வதுண்டு ) தீர்த்தம் ஆடிவிட்டு, திருக்கோயில் அடைந்தார்கள். அழைப்பிதழில் கூறிய வண்ணம் ஹோமக் கொண்டாட்டம் மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் சரியாக 3:30 மணி அளவில் ஸ்ரீ வாஞ்ச கல்பித கணபதி ஹோமம் தொடங்கியது. மூத்தோனை வணங்காது, எந்த நிகழ்வும், காரியமும் வினை தீர்க்கும் நாயகன் துணை இன்றி நடக்காது அன்றோ? சிறப்பான முறையில் மூத்தோனை வணங்கி  ஸ்ரீ வாஞ்ச கல்பித கணபதி ஹோமம் நடைபெற்றது.




ஹோமத்தின் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம். ஒரு ஹோமம் செய்வதாயின் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யலாகா. ஹோமத்திற்கான பொருட்களை தயார் செய்வது முதல் குருவருள் வேண்டும், ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கடைபிடிக்க வேண்டும். ஹோமம் செய்பவர்கள் தங்களுக்கான நித்திய பூசை போன்றவற்றையும் தவறாது கடைபிடிக்க வேண்டும். அப்படிஇருந்தால் தான் யாகத்தின் பலன் உடனே கிடைக்கும். யாகத்திலேயே நாம் சில உணர்தல்களை பெற முடியும். இந்த ஹோமமும் அப்படியே.  குருவருள் பற்றிட இந்த யாகம் காட்டியது.




அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்ஸன ஹோமம் நடைபெற்றது. அந்த இடம் முழுதும் யாகத்தீயின் அருளில் மிளிர்ந்து கொண்டிருந்தது. காணவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது. பூக்களின் வாசத்தில், யாகத்தீயின் வெம்மையில் ஐந்து புலன்களும் ஒடுங்கியது. உடலுக்கு மட்டுமே தினமும் உணவை கொண்டிருக்கின்றோம். நம்மையும் அறியாமல் உயிருக்கான உணவு இந்த யாகத்தில் கிடைத்து. உயிர் உணர்வு பெற, மனோ லயம் பெற்றதை உணர்ந்தார்கள்.






மாசி மக சிறப்பு நாளில், தீர்த்தமாடி, ஹோமம் பார்ப்பது என்றால் சும்மாவா? குருவருளோடு இறையருளும் கிடைத்தால் தான் இது போன்ற நிகழ்வில் நாம் கண்டு கேட்டு உணர முடியும். அந்த வகையில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழு அன்பர்களுக்காகவே இந்த சிறப்பு பதிவு என்ற யாம் எண்ணுகின்றோம். மீண்டும் மீண்டும் ஹோம நிகழ்வுகள் இங்கே.





அடுத்த யாகம் நம் அகத்தியருக்குத்  தான்.





நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

என்று உண்மை நிலை காட்டி, நம்மை வாழ்விக்க வந்த குருவின் பொற்பதம் அடையும் நிலையில் அகத்திய ஹோமம் நடைபெற்றது.








நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார். அகத்தியம் என்றால் என்ன? அது சத்தியம் தான். சத்தியம் என்றால் என்ன? அது அகத்தியம் தான் . அகத்திய அடியார்களை சோதனைக்கு உள்ளாக்கி, சத்தியம் நிலைபெற செய்வது அகத்தியமே சத்தியம், சத்தியமே அகத்தியம் என்று உணர்த்தவே.






பின்னர் சர்வ இரட்சார்த்த அஸ்திர ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத சிவா சஹஸ்ர நாம அர்ச்சனை , ஸ்ரீ மாதா லோபாமுத்ரா தேவி சமேத ஸ்ரீ அகத்திய மகரிஷி அபிஷேகம், புஷ்பாஞ்சலி என விழாக் கோலம் பூண்டது. ஹோமத்தில் காலை 8மணி முதல் காலை உணவாக இட்லி,பொங்கல்,பூரி,கேசரி என தேவாமிர்த சுவாமியை உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.




இறுதியில் அனைவருக்கும் ஹோம பிரசாதமாக திருநீறு,அகத்தியர் மகரிஷி அருள் வழங்கும் காட்சிப் படம் அடங்கிய பை வழங்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. நமக்கு பிரசாத பை அனுப்பி வைத்தார்கள். குருவருளினால்  இந்த ஹோமம் சாத்தியப்பட்டது. திருவருளினால் இந்த ஹோமம் அருளப்பட்டது. இந்த ஹோமத்திற்காக இரவு, பகல் பாராது உழைத்த அத்துணை நல் உள்ளங்களுக்கும், பொருளுதவி செய்து நமக்கு உற்றதுணையாய் இருந்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் வாழ்வில் மென்மேலும் உயர,சித்தர் பெருமக்களின் ஆசி வேண்டி பிரார்த்தித்து, இங்கே நன்றி கூறி, மகிழ்வாய் பதிவை நிறைவு செய்கின்றோம்.





- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக :-

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ்- http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_17.html 







No comments:

Post a Comment