Subscribe

BREAKING NEWS

21 March 2018

யார் உண்மையான பக்தன் ?

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் ஒரு குட்டிக் கதை ஒன்றைப்  பார்க்கலாம். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்று எல்லாரும் சொல்வார்கள். அது போல் தான் இந்தக் கதையும். சிறிய கதை தான், தெரிந்த கதையாகவும் இருக்கலாம். ஆனால் கதையின் நீதி அளப்பரியது.

சரி. கதைக்குள் செல்வோம் வாருங்கள்.

வழக்கமாக சொல்ற மாதிரி..ஒரு ஊர்ல...இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டும் போது "இறைவா. உன்னை அனுதினமும் வணங்குகின்றேன்" என்று சொல்கின்றனர்.இதில் உண்மையான பக்தன் யார் எனபதே சந்தேகம். அவர்கள் இருவரும் நேராக கடவுளிடம் சென்று இந்த சந்தேகத்தை கேட்டனர்.

அப்போது இறைவன் "தேவதைகளே..! இந்த ஊரில் நீங்களே நேரில் சென்று அனைவரையும் விசாரித்து வந்து எனது உண்மையான பக்தன் யார் என்று நீங்களே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்.

உடனே அந்த இரு தேவதைகளும் புறப்பட்டு, அந்த ஊருக்கு சென்று ஒவ்வொருவராக விசாரிக்க தொடங்கினர்.


 ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.

அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவிலுக்கு  போவேன்," என்றான்.

மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.

இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.



இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

"தேவனே  ... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று  தேவதைகள் கேட்டன.

"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள்.

கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு. தேவதைகளுக்கு மட்டுமா புரிந்தது? நமக்கும் புரிந்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சொல்லியபடி சின்ன கதை தான். ஆனால் கதையின் நீதி பெரிது. நீங்கள் நினைப்பது போல, தினமும் கோயிலுக்கு சென்று வணங்கும் ஒவ்வொருவரும் உண்மையான பக்தர்கள் கிடையாது. இறைவனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி, தன் கடமை செய்து, பிறருக்கு உதவும் நல்ல உள்ளமும், எண்ணமும் உடையவர்களே உண்மையான பக்தர்கள்.

பக்தர்கள் எனும் நிலையிலிருந்து நாமும் உண்மையான பக்தர்களாக மாறலாமே ?






தற்போது நாம் சென்று வந்த வெள்ளியங்கிரி யாத்திரையில் அம்மாவாசை அன்னதானமாக அடிவாரக்கோயிலில் சுமார் 50 பேருக்கு உணவளித்தோம். வெள்ளியங்கிரி மலை ஏறி, இறங்கி வந்த அடியார்களுக்கு நாம் கொடுத்த உணவு சற்றேனும் பசி போக்கி இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்



No comments:

Post a Comment