Subscribe

BREAKING NEWS

07 March 2018

யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை



தீர்த்த மலை ..

நாம் எதிர்பாராது கிடைத்த யாத்திரை. இரண்டு வாரங்களுக்கு முன்பு சனிக்கிழமை மதியம் நம் இரு உறவுகளோடு பேசி, அன்றிரவு பயணம் செய்தோம். தீர்த்தகிரி சென்று தீர்த்தமாடல் வேண்டும் என்று நாம் பல நாட்கள் தவமாய் தவமிருந்தோம். எதற்கும் ஒரு நேரம் ,காலம் வேண்டாமா? படியளக்கும் பெருமாள் கடைக்கண் பார்வை நம்மீது விழுந்த உடன் யாத்திரை கிளம்பினோம். அங்கு சித்தர் பெருமானின் உயிர்நிலை கோயில் இருப்பதாய் கேள்விப்பட்டதும், அபிஷேக பொருட்கள் இரண்டிரண்டாய் வாங்கினோம், இரண்டு வஸ்திரம், இரண்டு பன்னீர், என அனைத்தும் இரண்டாய், கொஞ்சம் முந்திரி, பாதாம் பருப்பு என அனைத்தும் வாங்கி சனிக்கிழமை இரவு கிளம்பினோம்.

மலை மேல் தலைவரை பார்த்து நீராடி,தரிசனம் செய்ய உள்ளோம் என்றதும், மனதில் ஒரு படபடப்பு. மலை எப்படி இருக்கும்? அதிக தூரமோ? படிக்கட்டுகள் இருக்குமோ? வனம் அதிகமான பகுதியோ என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள். தீர்த்தமலையின் தீர்த்தம் எடுத்து, அந்த பசுமை சோலையின் வாசத்தில், ராமரின் சீடராய் விளங்கும் வானரர்களை காண என மனதுள் ஒரு மத்தாப்பூ பற்றிக் கொண்டது.

அதற்கு முன்பாக தீர்த்தமலை எங்கு உள்ளது? தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், அரூருக்கு அருகில் உள்ள தீர்த்தமலையில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள மலையும் அடிவாரத்தில் உள்ள ஊரும் தீர்த்த மலை என்றே அழைக்கப்படுகின்றன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்த கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். இதுவே தரும்புரி மாவட்டத்தில் தற்போது உள்ள கோயில்களில் பழமையானது ஆகும்.

தீர்த்த மலையில் இராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. இதில் இராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை என்பது இதன் சிறப்பு.

இனி யாத்திரை ..இல்லை இல்லை..தீர்த்த யாத்திரை செல்வோமா? ஞாயிற்றுக் கிழமை சரியாக 8 மணி அளவில் தீர்த்த மலை அடிவாரம் அடைந்தோம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் சற்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். அடிவாரத்தில் கேட்டு, சில உணவுப் பொட்டலங்கள் வாங்கி கொண்டோம். அப்படியே நடக்க ஆரம்பித்தோம். தீர்த்தகிரிசுவரர் நுழைவு வாயில் நம்மை வரவேற்றது. பொங்கும் இன்பம் உள்ளம் எங்கும். ஏங்கிய மனம் உணர்ந்தது ஆனந்தம்.





நுழைவாயில் வாழியே பாரத்தால் ஒரு கோயில் சுவர் தெரிகின்றதா? அதுவே அடிவாரத்தில் உள்ள தீர்த்தகிரிசுவரர்  திருக்கோயில். நுழைவுவாயில் கடந்து இடப்புறம் திரும்ப, சிறு கடைகள் இருந்தன. ஆஞ்சனேயர் குரங்கு ரூபத்தில் இங்கு அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டோம். பொறி,கடலை, அகல் விளக்கு, பூசைக்கு தேவையான தேங்காய்,பழம் என பொருட்கள் வாங்கிவிட்டு நடையைக் கட்டினோம்.






இங்கு தேர்த்திருவிழா மிக மிக விசேஷம் என்று அங்கிருந்த தேர்களை பார்க்கும் போது தெரிந்தது. தேர்க்கால்கள் ஒவ்வொன்றும் நம்முள் பிரமிப்பை ஏற்படுத்தியது.






அங்கே நடந்து சென்ற போது, சாலையின் இருமருங்கிலும் இருந்த வீடுகளைக் கண்டோம். தீர்த்தம் பிடிப்பதற்கென இரு நெகிழிக் குவளைகள் வாங்கிக் கொண்டு நடக்கலானோம். 



அப்போது தான் மீண்டும் ஒரு நுழைவு வாயில் நம்மை வரவேற்றது. அங்கே ஒரு சில சாதுக்கள் இருந்தனர். நாம் வாங்கிச் சென்ற பொரிகளை கொஞ்சம் கொடுத்து விட்டு நடையைத் தொடர்ந்தோம். இந்த நுழைவுவாயில் வழியே பார்க்கும் போது, தீர்த்த மலையைக் கண்டோம்.




சிறிது தூரத்தில் வனச்சரக அலுவலக அறிவிப்பு கண்டோம். இங்கு சோதனைச் சாவடி போல் வைத்து இருந்தார்கள். இங்கிருந்து தான் தீர்த்தமலை யாத்திரை நமக்கு தொடங்குவது போல் இருந்தது.






சற்று தூரத்தில் நாம் கண்ட காட்சி. யாருக்கும் விவரங்கள் தெரியவில்லை.



அப்பனைக் கண்டோம். அருள் தரும் தேவனைக் கண்டோம். மெய்யனே...உன் மெய்யில் நாம் கொண்ட பொய் கரைய வேண்டும் என வேண்டினோம். இந்த பாதையின் தொடக்கத்தில் தான் சித்தரின் உயிர்நிலைக் கோவில் உள்ளது. அதனைப்பற்றி வரும் பதிவுகளில் காணலாம். இது வரை சாதாரணமாக இருந்த சாலை, தற்போது ஏற்றமுடைய பாதையாக இருந்தது. 


ஏற்றமுடைய பாதைதான். ஆனால் படிக்கட்டுகள் இருந்ததால் ஏறுவதற்கு சிரம்மில்லை. இங்கிருந்து ஆரம்பித்த போது, அகத்தியர் கீதம் ஒலிக்கச் செய்து கொண்டே ஆரம்பித்தோம்.


செல்லப்பன் அண்ணாவுடன்.



தீர்த்த மலை சற்று பசுமை இழந்து தவிப்பதாக உள்ளது. தயை கூர்ந்து மலை யாத்திரை செல்பவர்கள் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை அறவே தவிர்க்கவும்.நாம் மட்டுமா கொண்டு செல்கின்றோம். நாம் சரியாய் இருந்து என்ன ஆகிவிடப் போகின்றது என்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு, உங்களின் மாற்றத்தை நிகழ்த்துங்கள். இந்த பாதை முழுதும் சாதுக்கள் இருந்தார்கள். வாங்கிச் சென்ற பொரிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக் கொண்டே சென்றோம்.



தம்பி வினோத் மற்றும் செல்லப்பன் அண்ணா


சற்று தூரத்தில் தெரிந்த தங்கும் இடம். மேலே பார்த்த போது பெருமானைக் கண்டோம்.



அட..பெருமானின் இருபுறமும் நம் உள்ளத்தை ஆட்சி செய்யும் ஈசனின் தரிசனம். அகத்தீசனே ! போற்றி என்று போற்றிக் கொண்டே நடந்தோம். களைப்பு ஏதும் அதிகமாக தெரியவில்லை.இந்த மலை ஏறுவதற்கு முன்னரே அனுமந்த தீர்த்தம் உள்ளதாக சொன்னார்கள். மீண்டும் இறங்கிச் சென்று அல்லவா காண வேண்டும். சரி. மலை இறங்கி பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். திடீரென ஏன் இந்த எண்ணம் உதித்தது. நீங்களே ...கீழே பாருங்கள் 





நாகர் வழிபாடு




நடையைத் தொடர்ந்தோம் 


சற்று தொலைவில் நந்தியைக் கண்டோம். நந்தி  தேவரின் தரிசனம் பெற்று விட்டு, மீண்டும் நடக்கத் தொடங்கினோம். அனைத்து தோஷங்களையும் நீக்கும் பிரதோஷ நாயகன் தரிசனம் நம்மில் மகிழ்வைத் தந்தது.


அடுத்த பதிவில் மீண்டும் இங்கிருந்து யாத்திரையை தொடங்குவோம் . தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் ராமர் வழிபட்ட கோயில் என்ற செய்தியை  தினத்தந்தி வாயிலாக அறிந்தோம். உங்கள் பார்வைக்கு அதனை சமர்பிக்கின்றோம். ராமரின் பாதம் பட்ட இடத்தில் இந்த சிறியோனின் பாதம் பட, எத்துணை பிறப்பை கடந்து வந்துள்ளேனோ...நன்றி.

- அடுத்த பதிவில் நந்தி தரிசன இடத்திலிருந்து யாத்திரை ஆரம்பம் 

No comments:

Post a Comment