Subscribe

BREAKING NEWS

27 September 2017

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5)

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி #நமோஸ்துதே

எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே! க்ஷேமத்தைக் கொடுப்பவளே, எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவளே, த்ரயம்பகே, நாராயணியே, உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே உனக்கு நமஸ்காரம்.

நவராத்திரிக் கொண்டாட்டங்களில் இன்று நாம் காண இருப்பது நான்காம் நாள் தரிசனம்.


விதவிதமான நைவேத்தியங்கள், கோலங்கள், வழிபாடுகள், தானங்கள், பாடல்கள் என இந்த விழாவே களிப்பூட்டக்கூடியது. இந்த நாள்களில் ஆட்டம், பாட்டத்துக்கு குறைவே இருக்காது. சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைக்கும் வைபவம். அனைத்து உயிர்களிலும், சக்தியைக் காண வேண்டும் என்பதை சொல்லவே படிகளில் தெய்வங்களின் பொம்மைகள் மட்டுமின்றி எல்லாவித பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. மாலைவேளைகளில் கொலு வைத்தவர்கள் வீடே,  திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறுமிகளை அம்பிகையின் வடிவமாக கொண்டாடுவது வழக்கம். முருகன், கிருஷ்ணன், ராதா, ராமன்,  அம்பிகை போன்ற வேடங்களை அணிந்து குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும், இந்த விழாவின் ஒன்பதாம் நாள் கல்விக்காக சரஸ்வதி பூஜையும்,  உழைப்புக்குத் துணை நிற்கும் கருவிகளைக் கொண்டாடுவதற்காக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் செய்யும் பூஜையால் அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என ஏழேழ் பரம்பரைக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

நான்காம் நாளில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலைப் போலவே நீல நிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாகனமாகக் கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டபோது மும்மூர்த்தியரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப் பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண்குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடவேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெயருடன் வழிபட வேண்டும். ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

நான்காம் நாள் தரிசனம் பெறலாமா? மாமரத்து விநாயகர் கோயிலில் தனலட்சுமி அலங்காரமும், மாமரத்து விநாயகர் கோயிலில் வாராஹி அம்மன் அலங்காரமும் கண்டோம்.

அன்னை ஸ்ரீ மகாவாராஹி  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி).

ஸ்ரீ வாராஹி உபாசனை சிறந்த  வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்  தேவையில்லை. ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை  ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.

மந்திர சாஸ்திரபழமொழி : “வாராஹிக்காரனோடு வாதாடாதே”

ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தே சேரும் அதில் இருந்து அன்னை நம்மைக் காக்க மாட்டாள். எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ”எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டும்.

ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும்.

ஸ்ரீ மகாவாராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

வழிபாட்டு முறைகள் :-

புதன், சனிக்கிழமைகள், திரயோதசி திதி, பஞ்சமி திதி, நவமி, திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம். எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

செல்வம், அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும், மனவலிமை, ஆளுமை, எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.

எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும், எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.

ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.

வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும்.

மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.

பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும்.

நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத்தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்:-

தோல் எடுக்காத உளுந்து வடை, மிளகு சேர்த்த வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.

குறிப்பு :

1. வாராஹிக்கு ஏற்ற மாலை – செவ்வரளி மாலை.
2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் – செந்தாமரை, வெண் தாமரை.
3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு – தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு.
4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் – மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை.
5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் – வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர்.
6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் – கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன.

வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் :

1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி.
2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி.
3. புலி வாகன வாராஹி.
4. வெண் குதிரை வாகன வாராஹி.


இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.










வேலி அம்மன் ஆலயத்தில் தனலட்சுமி தரிசனம் 









வாராஹி அம்மன் அவதாரம் 



இன்னும் கண்களில் மட்டுமல்ல..நெஞ்சிலும் நிறைத்துள்ளாள் சக்தி. அடுத்த பதிவில் ஐந்தாம் நாள் தரிசனம் பற்றி காண்போம்.

முந்தைய பதிவுகளுக்கு :-


நவராத்திரி சிறப்பு பதிவு - கொலு பொம்மையின் தத்துவம்! (4) - https://tut-temple.blogspot.in/2017/09/4.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


No comments:

Post a Comment