Subscribe

BREAKING NEWS

25 October 2017

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே! எம் ஐயனே!!

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம்... ஐயனே எம் ஐயனே 

வாழ்வின் நிலையாமை உணர்த்துகின்ற அருமையான  பாடல் வரிகள். இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாக சாலையில்,கோயிலில்  யாசிப்பவர்களைக் காண முடிகின்றது. நாமும் சில நேரங்களில் நம்மால் முடிந்தவற்றை அவர்களின் தட்டில் போடுகின்றோம். ஆனால் சிலர் நம்மிடம் ஏன் இப்படி இவர்களை ஊக்குவிக்கின்றீர்கள், கோயிலுக்கு போகும் போது செய்யாமல், தரிசனம் முடித்து வரும் போது செய்யலாமே என்று சொன்னதுண்டு.

இதை பற்றிய ஆழமாக சிந்திக்க வைப்பதே இந்த பதிவின் நோக்கம்.

ஆலயம் ஏன் செல்கின்றோம். நம்முடைய இந்து தர்மம் ஆலயம் செல்ல வேண்டும் என்று சொல்கின்றது. ஆலயம் செல்வது சாலவும் நன்று  என்பது நம் முன்னோர் வாக்கு. ஆலயம் செல்லும் போதும்,வரும் போதும் பிச்சை இடக்  கூடாது என்று யாரும் சொல்லவில்லை.இல்லாதவருக்கும்,
வறுமையில் உள்ளோருக்கும் உதவுவது நம் பழக்க வழக்கத்தில் ஒன்று. நம் பாரம்பரியத்தில் ஒன்று,நம் பண்பாட்டில் ஒன்று.இது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தலே இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம், தானும் வாழ்ந்து,மற்றவர்களையும் வாழச்  செய்வதே இந்த பூமியின் நோக்கம். அப்படி இருக்கும் போது, கோயிலுக்கு போகும் போதோ, வரும் போதோ,கோயிலில் இருந்து வரும் போதோ எப்போது வேண்டுமானாலும் தானம் செய்யலாம்.

வேறொரு விதமாக  பார்த்தால், நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.பதிவின் தலைப்பை படியுங்கள்.சொல்லும் விஷயம் புரியும். இந்த உடல் என்ற பாத்திரம் பிச்சைப் பாத்திரம் தானே. அண்டம் முழுதும் இந்த பிண்டத்துள் அடக்கம்.ஆனால் இந்த பிண்டம் எங்கிருந்து வந்தது?
அம்மையும் அப்பனும் சேர்ந்து கொடுத்தது தானே. அப்படிப் பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பிச்சைக்காரர்கள் தானே?

இதோ பாடல் வரிகளை இங்கே பதிக்கின்றோம்.

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்பொடு  சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா...
இம்மையை நான் அறியாததா...
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ் விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா   பழ  வினையா 
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு  அலைந்திடும் பொருளற்ற  வாழ்க்கையும்  துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால்  தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

 வேறொரு வழியிலும் நாம் பிச்சைக்காரர்கள் தாம். கோயிலுக்கு சென்று நாம் இறைவனிடம் வைக்கும் கோரிக்கைகள் என்ன? நம் உடலிலே வலுவும்,தெம்பும் இருந்தும்,நாம் அவரிடம் அதைக் கொடு,இதைக் கொடு என்று தானே கேட்கிறோம்.இதுவும் ஒரு வகையில் பிச்சை தானே?
கோயிலுக்கு வெளியில் அமர்ந்து இருப்பவர்கள் எதிர்பார்ப்பது பத்து,இருபது ரூபாய் என்றால் கோயிலுக்குள் நாம் சென்று ஆயிரங்களில் தொடங்கி..லட்சத்தை எட்டுகின்றோம். சிலர் வீடு,பொன்,பொருள்,வேலை என்று கேட்பார்கள்.ஆனால் இவை எல்லாம் நம் சக்திக்கு உட்பட்டவையே..என்னே ! கொஞ்சம் டிப் டாப்பாக அவரிடம் கேட்கின்றோம்.

அப்படியென்றால் அவரிடம் என்ன கேட்க வேண்டும் ? என்ற கேள்வி எழுகிறதா? இதனைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சங்கல்பமாக வழங்கி உள்ளார்கள்.பட்டியல் இதோ

1. உடல்நலம்
2. நீளாயுள்
3. நிறைசெல்வம்
4.உயர்புகழ்
5. மெய்ஞானம்

இவற்றை தான் கேட்க வேண்டும்.இவற்றை சற்று விரிவாக வரும் பதிவுகளில் ஊன்றி காண்போம்.

இப்போதாவது ஒத்துக் கொள்கின்றீர்களா? நாமும் பெரிய பிச்சைக்காரர்கள் என்று. நாம் கோயில் வாசலில் இருக்கும் அவர்களை பார்த்து முகம் சுளிக்கலாமா ? கூடவே கூடாது. மாறாக என்ன செய்ய வேண்டும்.நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்ய முற்பட வேண்டும்.

நாம் வணங்கும் மகான்கள்,சித்தர்கள் என பலர் கிழிந்த ஆடைகளுடன் யாசித்து வாழ்ந்து உள்ளார்கள்.எனவே யாசகம் கேட்பவர்களை ஏளனமாய் பார்க்கக் கூடாது, ஏன்? லோகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் அந்த சிவ பெருமானே,அன்னை அன்னபூரணியிடம் யாசகம் பெற்றவர் தான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் ?




இறுதியாக வள்ளுவர் காட்டும் குறள் நெறியை காட்ட விரும்புகின்றோம்.


இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

 உரை 1
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

உரை 2
இரந்து கேட்பதனால் உள்ளதை இல்லை என்று சொல்பவரிடத்தில்  சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.


உரை 3
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

அப்படியென்றால் நாம், யாசகர்களை ஊக்குவிக்கலாமா? என்றால்..அவர்களின் அருகில் சென்று,அவர்களின் தேவையை கேளுங்கள். என்ன கேட்பார்கள்? ஒரு வேளை உணவு,மருந்துப் பொருள் போன்றதாய் இருக்கும். இவற்றை செய்ய ஆயிரங்கள் வேண்டாமே? மனமிருந்தால் போதுமே..ஒரு 20 ரூபாயில் நாம் அவர்களை மகிழ்விக்க முடியும்.

TUT குழுமத்தின் குறிக்கோளாக நாம் கொள்வது உழவாரமும்,அன்ன தானமும். உடலால் உழவார மூலம் இறைவனுக்கு தொண்டு செய்கின்றோம். மனத்தால் அன்னதானம் மூலம் இறைவனுக்கு அன்பை விதைக்கின்றோம்.









                         உணவை வாங்கி விட்டு, அவர்கள் நன்றி சொன்ன காட்சி 

சென்ற அமாவாசை அன்னதான துளிகளின் படங்களை மேலே இணைத்துள்ளோம்.அவற்றை தனிப் பதிவாக தர இயலவில்லை. ஆனால் சுமார் 20 உணவுப் பொட்டலங்களுடன், இரு வண்டியில் 10,10 உணவாக எடுத்துக் கிளம்பினோம். சரியாக 8 மணி அளவில் ஆரம்பித்த நிகழ்வு, 9:30 மணி அளவில் முடிந்தது.இதோ! வரும் சனிக்கிழமை அன்றும் (AVM உடன் இணைந்து ), செவ்வாய்க்கிழமை (அமாவாசை )அன்றும்  அன்னதானம் செய்ய உள்ளோம். குருவருளும்,திருவருளும் வழிகாட்டிட வேண்டுகின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு :-

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment