Subscribe

BREAKING NEWS

15 July 2017

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா !

இது வரை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் ஆறாவது மலை பயணம் தொடர்ச்சி இங்கே!
ஆம் ! அன்பர்களே ! இப்போது நினைத்து பார்த்தாலும் பிரம்மிப்பாய் உள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது.அவர் அருளாலே அவர் தாள் வணங்கி ! என்றெல்லாம் கேட்டிருப்போம். நமக்கு நடைபெறும் போது தான் இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிகின்றது.

இந்த பிறப்பிலே உன் தாள் அடைய வேண்டும்.அதுதானே எங்களின் பிறவிப் பயன்.இந்த வெள்ளிங்கிரி யாத்திரை உடல்,உயிர்,மனம் இவை மூன்றையும் வெளுத்து வாங்கியது என்பதே உண்மை.மலை ஏற,ஏற நமக்கு பக்குவ மனநிலை கிடைக்கின்றது. அவன் நாம் இன்றி மலை ஏறுதல் என்பது இங்கே சிரமமே.நமது கவனமும் சிதறாது, அப்படியே நம்முள் ஒரு ஆனந்த பரவச நிலையைத் தருகின்றார். இது ! சொற்களில் அடக்க இயலாத அனுபவம்.

அந்த பரமே! நம்மிடம் கொஞ்ச நேரம் வசமாகின்ற பரவசம்!
ஆன்மா லயப்படுகின்ற ஆலய தரிசனம்
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உண்மை உணர்த்தும் உன்னத நிலை

அடுத்து ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் உள்ளன. குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய  பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.


சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் ஆரம்பித்த எங்கள் யாத்திரை, மறுநாள் காலை 5 ம் மலையில் தொடர்ந்தது. அங்கு ஏற்பட்ட சாரல் மழை, கடுங் குளிர்,எங்கள் உடல் நிலை இதை எல்லாம் கருத்தில் கொண்டு சனி இரவு 4 ம் மலையில் தங்கி விட்டோம். அடுத்த நாள் காலை ஐந்தாம் மலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த நாள் காலையிலும் விட்டு விட்டு மெல்ல தூறல், காற்று என்ற நிலையே இருந்தது.எங்களின் வழிகாட்டி திரு.அருணானந்த ஸ்வாமிகளின் பேரில், மலை ஏற்றத்தை நிறுத்த முடிவு செய்தோம். ஆறாம் மலை மற்றும் ஏழாம் மலை இன்னும் சற்று கடினமே என்றார். ஆனால ஈசனின் திருவிளையாடல் பார்த்தீர்களா?

என்னுடனான நண்பர் கார்த்திக் அழைப்பின் பேரில்,நானும் அவரும் மேற்கொண்டு யாத்திரை தொடர முடிவெடுத்தோம்.ஆனால் எனக்கு சற்று மனக் கலக்கமாகவே இருந்தது. புதிய நண்பர்களோடு சேர்ந்து 6ம் மலை இறங்க ஆரம்பித்தோம். அனைத்து மலைகளும் ஏறுமுகமே ! ஆனால் ஆறாம் மலை இறங்கு முகமாய் இருந்தது.இங்கே எங்களால் மேற்கொண்டு படங்கள் எடுக்க முடியவில்லை. ஏனெனில் இறங்குவதில் தான் முழு கவனமும் இருந்தது. சற்று பாறைகள் இடையிடையே மண் பாதை,மழையின் ஓட்டத்தில் சற்று வழுக்கிக் கொண்டே இருந்தது.

சுமார் முப்பது நிமிடம் நடைக்கு பின்பு,ஆறாம் மலை முடிந்து அடிவாரம் வந்து விட்டது.இந்த ஆறாம் மலை நம் உடல் அளவில் ஆக்கினை என்ற யோக நிலைக்கு ஒப்பாகும்.இங்கே ஆண்டி சுனை காணப்பட்டது.




ஆண்டி சுனை 


ஆறாம் மலை அடிவாரம் 

இந்த சுனையில் குளிக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது.ஆனால் என்னுடன் வந்த அனைவரும் மேலே ஏழாம் மலை பயணம் நோக்கி மும்முரமாக இருந்ததால், கால் மட்டும் நனைத்தோம்.அப்பப்பா! என்ன குளிர்ச்சி! சில்லென்ற ஒரு உணர்வு.உடலில் இந்த சுனை நீர் பட்டதும் ! அன்றைய தினம் நாம் ஒரு கூட்டு வழிபாடு அறிவிப்பு செய்திருந்தோம். முருகப் பெருமானின் ஷடாக்ஷர மந்திரம் 1008 முறை ஓதி, வழிபாடு செய்வதே! மனதிற்குள் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தோம். 

அடுத்து ஏழாவது மலை.ஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் ரூபாய் இருபதுக்கு  கிடைக்கும் சூடான சுவையான சுக்கு காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இக்கடையை அடுத்து கோயில் நிர்வாகத்தினரால் வெய்த தகர கொட்டகை ஒன்று உள்ளது. இதில் சுமார் 50/60 பேர் படுத்து ஓய்வெடுக்கலாம். இது இரண்டு மாத உபயோகத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். இங்கு தங்கி ஓய்வெடுத்து பின் விடியற்காலை பயணத்தைத் தொடரலாம். இங்கு தங்காமலும் செல்லலாம். 

இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். ஏழாம் மலை ஏற்றம்..மிக மிக கடினமே. முதலில் அந்த டீக்கடை தாண்டிய பிறகு,செங்குத்தான ஏற்றம் ஆரம்பம்.இடையினையே கற்களால் ஆன பாறைகளினுள் செல்ல வேண்டும்.மழை பெய்த ஈரத்தில்,கால் வழுக்க ஆரம்பித்தது.அங்கங்கே ஆசுவாசப்படுத்தி,ஏறலானோம். ஒரு மூன்று மடங்கு ஏத்தம் இருக்கும். உடல் சற்று தளர ஆரம்பித்தது.தகப்பன்சாமியை துணைக்கு அழைத்தோம்.

அப்படியே சென்று கொண்டிருந்தோம். வேலும்,மயிலும்,சேவலும் துணை, ஓம் சரவண பவ ஓம் மந்திரம் மனதுள் ஓடியது. கூட்டு வழிபாட்டை மனதுள் தொடர்ந்து,நடக்க ஆரம்பித்தோம்.நேரம் ஆக,ஆக மலையின் உயரம் மனதுள் அச்சமூட்டியது.மூங்கில் தடியை ஊன்றி நடந்தாலும்,வழுக்கி விழ நேர்ந்தது.வேறு வழி தெரியவில்லை. ஒரு கையில் மூங்கில் தடியை ஊன்றி,மறு கையில் பாதை ஓரமாக இருந்த புற்களைப் பிடித்து ஏறினோம்.ஓரிடத்தில் வழுக்கி விட்டது.நல்ல வேளை! அருகே இருந்த பாறையை பிடித்து அப்படியே ஒரு 5 நிமிடம் பிடித்துக் கொண்டோம்.மனதுள் பயம் ஒட்டிக் கொன்றது.ஒரு புறம் முருகப் பெருமான் ! அவரை அப்படியே துணைக்கு அழைத்து மேலே மலை உச்சியை அடைந்து விட்டோம்.



இம் மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற  பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக் கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம் நம் கண்களை விட்டு என்றுமே அகலாத நினைவுகளாகும்.







இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரசதகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூஜை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். ஆன்மிக அன்பர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாகத் திகழும் ஈசனை தொழுதுய்ய வேண்டும்.







உமையவள் இறைவன் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திரு நடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து பல காரமேடை என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.









விநாயகர்,அம்மன் தரிசனம் முடித்த பின்பு,எம் பெருமான்,கயிலை நாதன் தரிசனம்,இதற்கு தானே ஆசைப்பட்டோம் தலைவா ! என்று அழுது,தொழுது,தெரிந்த பதிகங்களை பாடினோம்.சித்தர்களின் நாமங்களை போற்றினோம்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ சில நேரம் பிரார்த்தனை செய்தோம்.அபிஷேகப் பிரியன், பிறை சூடிய எம்பிரான், வெள்ளொளி வேந்தன்,கண்ணப்பன் இன்னும் எத்தனை எத்தனை நாமங்களோ.அத்தனையும் உன் புகழ் பாடுதே! என்று தரிசனம் செய்து விட்டு  பின்பு கீழே இறங்கத் தொடங்கினோம்.

சிலருக்கு ஏறுவது கடினம்.சிலருக்கு இறங்குவது கடினம்.நமக்கு இரண்டுமே தான்.ஏழாம் மலை இறக்கம் நடந்து,ஊர்ந்து என தொடர்ந்தது.ஆறாம் மலை இப்போது ஏறு முகமாய்.எங்களோடு வந்தவர்கள் சற்று வேகம் எடுத்தனர்.நானும் அவர்களை பின்தொடர்ந்து ,ஓடினோம்.அப்படியே 5ம் மலை.இங்கே நாங்கள் அப்படியே மேலே ஏறி பீமன் களி உருண்டை ஒட்டிய பகுதிக்கு சென்றோம்.அப்படியே நான்காம் மலை ..நாங்கள் தங்கி இருந்த கூடாரம் நெருங்கி விட்டோம்.அங்கே சென்று பார்த்தோம்.எங்களோடு வந்த மூவர் இருந்தனர்.எங்களை அழைத்து சென்ற உறவுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கே சிறிது இளைப்பாறினோம்.


சூடான கஞ்சி இருந்தது.இருந்த பசியில்,ஊறுகாய் போட்டு,ஒரு பிடி பிடித்தோம். அனைவரும் சேர்ந்து இறங்க ஆரம்பித்தோம்.இறங்குவதும் சற்று கடினமே.ஏறுவதை பார்க்கும் போது,இறங்குவது சற்று எளிதே. இருப்பினும் 2 மற்றும் 1 ம் மலைகளில் முடியவில்லை.கால் கடுக்க ஆரம்பித்து விட்டது.முதல் மலை இறங்க ஆரம்பித்த போது ..எப்போது அடிவாரம் வரும் என்று மனம் ஏங்க  ஆரம்பித்து விட்டது. ஒரு வழியாய் அடிவாரம் அடைந்த பின்பு, அடிவாரக் கோவில் உள்ள இடத்தில் கீழே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.மூங்கில் தடியைக் கையோடு வைத்துக் கொண்டு,அடிவாரத்தில் உள்ள நண்பர்களோடு இணைந்தோம்.




அதிசயமும் ஆச்சர்யமும் நிறைந்தது தான் வெள்ளியங்கிரி மலைப்பயணம். முதல் மலைக்குப் பெயர் மூங்கில்திட்டு. சுற்றிலும் மூங்கில் காடுகள். ஒருபுறம் மேடு. மறுபுறம் சரிவு. இரண்டாவது மலை வழுக்கு பாறை. பாதிக்கும் மேல் வழுக்கும் பாறைகளால் ஆனது.  ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இம்மலையில் மூங்கில் கம்போடு தான் நடக்க முடியும். கல்லும் முள்ளுமாக கிடந்த இந்த மலையை செப்பனிட்டு, பாதையை உருவாக்கியவர் ஒட்டர் என்ற சித்தர். மூன்றாவது மலை தேக்கு திட்டு.  இதுவும் வழுக்கு பாறைகளால் ஆனது. ஒரு பாதம் மட்டும் பதியும் அளவுக்கு படிக்கட்டுகள் போல வெட்டி வைத்துள்ளனர். பத்து வருடங்களுக்கு முன்பு வரை கயிறு கட்டியே கடந்துள்ளனர். மிகுந்த கவனத்தோடு இம்மலையை கடக்க வேண்டும். 


நான்காவது மலை ஈச்சல் திட்டு. இதமான தென்றல் வீசும் மலை. ஐந்தாவது மலை காத்தாதி திட்டு. இங்குள்ள மண்திருநீறு போலவே இருப்பதால் இம்மலை திருநீற்றுமலை எனப்படுகிறது. இரண்டு மலைகளிலும் படிகள் இல்லை. கரடுமுரடான பாறைகளின் மீது ஏறியே நடக்க வேண்டும். ஐந்தாவது மலைப்பாதை ஏற்ற இறக்கங்களை கொண்டது. ஒரு அடிதவறினாலும் அதாலபாதாளத்தில் விழ வேண்டியதுதான். ஆறாவது மலை ஆண்டிசுனை. காஞ்சி மாநதி இங்குதான் உருவாகிறது. இந்நதியே அடிவாரத்தில் நொய்யல் எனப்படுகிறது. இம்மலையின் முடிவில் ஆண்டி சுனைஉள்ளது. இதில் நீராடுவது ஆனந்த அனுபவம்.  ஏழாவது மலை சாமிகிரி. இது தான் ஈசனின் உறைவிடம். நந்தி வடிவில் உள்ள இம்மலையில் உச்சியில் சிறு திட்டு. அதில் உள்ள குகைக்குள் ஈசன் பஞ்சலிங்கங்களாகவும் வெள்ளியங்கிரி நாதராகவும் உமையவள் மனோன்மணி அம்மையாகவும் காட்சி தருகின்றனர். மகாபாரதம், ராமாயணத்தோடு நெருங்கிய தொடர்புடையது இம்மலை என்று கூறுகிறார்.

இம்மலை முழுவதும் நெல்லிக்காய், கடுக்காய், தாண்டிக்காய், மாசிக்காய், பூச்சக் கொட்டை, வெண் மருது, வேங்கை, ருத்திராட்சம், யானையின் தும்பிக்கையைப் போல் சுருண்டு கிடக்கும் யானை வணங்கி, யானை மிரட்டி, கல்ப மூலிகையான ஆரோக்கிய பச்சை, கருடப் பச்சை, முடவாட்டுக்கல் தட்டுக்கொடி, சிறு குறிஞ்சான் போன்ற மூலிகைகள் இங்கு குவிந்து கிடக்கின்றன. மலையில் பாம்பாட்டி சுனை, கைத்தடி சுனை, ஆண்டி சுனை என மூன்று அபூர்வ நீர் ஊற்றுகள் உள்ளன. சிவபெருமானே தவம் புரிந்த இடம் என்பதால் சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் தவமியற்றும் இடம் என்பதால் அமைதியும், சாந்தமும் நிலவுகிறது. பலர் தங்ள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சூலங்கள் செய்து அர்ப்பணிக்கின்றனர். அந்த சூலங்களே கிரிமலைத்திட்டில் வேலிகளாக அமைந்துள்ளன. பக்தர்கள் மலை மேல் ஏறுவதற்கு பயன்படும் மூங்கில் கம்பை பக்தியோடு கொண்டு சென்று  பூஜையறையில் வைத்து வழிபடுகின்றனர்.

செங்குத்தான மலை, கரடுமுரடான பாறைகள், வாய் பிளந்து நிற்கும் அதலபாதாளம். யானை, செந்நாய் போன்ற வனவிலங்குகள். மலை மேல் செல்லச் செல்ல வாட்டும் குளிர், பனி. அந்தச் சிரமங்களைத் தாங்கித்தான் ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளயங்கிரியில் ஏறி உச்சியில் உறைந்திருக்கும் ஈசனைத் தரிசிக்க முடியும். பிரமிக்க வைக்கும் மலைகள், சித்தர்கள் வசித்த குகைகள், வானுயர்ந்த மரங்கள், குளிர்ந்த நீர்நிலைகள் என மனத்துக்குப் புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் வெள்ளயங்கிரி மலையில் நிறைந்துள்ளன




முதல் மலை
பிரணவ சொரூபம்
வெள்ளிவிநாயகர் உறைவிடம்
இரண்டாம் மலை
சுவாதிஷ்டானம்
பாம்பாட்டிச் சுனை
மூன்றாம் மலை
மணிப்பூரகம்
அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை
நான்காம் மலை
அநாகதம்
ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்
ஐந்தாம் மலை
விசுக்தி நிலை
பீமன் களியுருண்டை மலை
ஆறாம் மலை
ஆக்ஞை நிலை
சேத்திழைக்குகை, ஆண்டி சுனை
ஏழாவது மலை
சஹஸ்ரஹாரம்
சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி
ஆண்டவர்)



அவசியம் டிரஸ்ட் மூலம் பயணம் செய்த முதல் யாத்திரை.என்றென்றும் வாழ்வில் மறக்க முடியாது.மனம் இப்போதும் ஏங்குகின்றது. தலைவர் எப்போது நம்மை அழைப்பார் என்று?இறைவா! இதே போல் மீண்டும் அடுத்த ஆண்டு நின் தரிசனம் வேண்டும்..வாழ்வில் வேறென்ன வேண்டும்.நீயே வேண்டும். சிறப்பாக யாத்திரைஏற்பாடு செய்த அவசியம் டிரஸ்ட்  க்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


முந்தைய பதிவுகளுக்கு :-


வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html




No comments:

Post a Comment